செய்திகள்

கொரோனா பற்றி WHO: நிறைய நாடுகள் தப்பான வழியில் போகின்றன, நிலைமை மேலும் மோசமாகும்

நிறைய நாடுகள் தப்பான வழியில் செல்கின்றன. எனவே நிலைமை மேலும், மேலும் மோசமாகும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

சில நாடுகளின் அரசுகள் கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் இந்த தொற்று மேலும் மோசமாகிக்கொண்டே போகும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் ஆதனோம் கெப்ரியேசஸ் எச்சரித்துள்ளார். இந்த தொற்றினைக் குறைப்பதற்கான நிரூபிக்கப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளாத நாடுகளில் அபாயகரமான அளவில் தொற்று அதிகரித்துக்கொண்டு செல்கின்றன என்றும் அவர் கூறினார்.

தாம் குறிப்பாக கூற விரும்பவில்லை என்று கூறிய அவர், நிறைய நாடுகள் தப்பான பாதையில் செல்கின்றன என்று ஜெனீவாவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் திங்கள்கிழமை தெரிவித்தார்.

“இந்த வைரஸ் மக்களின் முதல் எதிரியாக இருக்கிறது. பல அரசுகளின், மக்களின் நடவடிக்கை இதைப் பிரதிபலிப்பதாக இல்லை” என்று அவர் குறிப்பிட்டார்.

தலைவர்கள் மாற்றி மாற்றிப் பேசுவதால், இந்த உலகத் தொற்றை கட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகளில் மக்கள் நம்பிக்கை இழக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எந்த தலைவர், எந்த நாடு என்று அவர் வெளிப்படையாக குறிப்பிடவில்லை என்றாலும், அவரது குறிப்புகள், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் தொற்று விவகாரத்தை சரியாக கையாளவில்லை என்று விமர்சிக்கப்படும் பிற உலகத் தலைவர்களைக் குறிப்பதாக இருக்கலாம் என்று பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

“அடிப்படையான விஷயங்களைப் பின்பற்றாவிட்டால், இந்த தொற்று ஒரே வழியில்தான் போகும். அதாவது மேலும் மேலும், மேலும், மேலும் மோசமாகும்” என்றார் டெட்ரோஸ்

Back to top button