செய்திகள்

தமிழ் அடிப்படைவாதமும் இஸ்லாம் மதவாதமும் தலைதூக்க இடமளிக்க மாட்டோம்: ஜனாதிபதி தெரிவிப்பு

கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தின் மற்றொரு கட்டம் குருணாகல் – கிரிபாவ, வேரகலவில் இன்று நடைபெற்றது.

இதன்போது, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி கருத்துக் கூறினார்.

ஏப்ரல் 21 தாக்குதலுக்கு அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கமும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்புக்கூற வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வலியுறுத்திக் கூறினார்.

பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படாததால், அவ்வாறான நிலை ஏற்பட்டமை ஆணைக்குழுவின் அறிக்கையில் தௌிவாவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

சாட்சிகள் குறித்து கவனம் செலுத்தும் போது, தலைதூக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராக போராடுவதற்காக ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம், மிகவும் செயல் திறன் மிக்க பொறுப்பை நிறைவேற்றத் தவறியதற்கான காரணத்தை புரிந்துகொள்வது விசாரணை நடத்தும் ஆணைக்குழுவிற்கு சிரமமானது என்று அறிக்கையின் 306 ஆம் பக்கத்தில் உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐ.எஸ் ஆதரவாளர்கள் இருப்பதுடன், ஐ.எஸ் தெற்காசியாவில் காட்டுத் தீ போல் பரவுவதாகவும் முற்போக்காக இருப்பதை விட செயற்திறன் மிக்கதாக இருக்க வேண்டும் எனவும் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், இன மற்றும் மத முரண்பாட்டை தூண்டுவதனை தடுப்பதற்கு சட்ட வரையறை தயாரிக்கப்பட வேண்டியதன் தேவையும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார்.

எனினும், துரதிர்ஷ்டவசமாக பிரதமர் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் அதனை செய்யத் தவறிவிட்டதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், தமிழ் அடிப்படைவாத, பிரிவினைவாத, பயங்கரவாதமும் இஸ்லாம் மதவாத அடிப்படைவாதமும் தலைதூக்க தமது அரசாங்கம் இடமளிக்காது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஸ குறிப்பிட்டார்.

தற்போது தாம் அதிகாரத்தில் இருப்பதால், தவறிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டிய பொறுப்பு தமக்கு இருப்பதாகவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை விற்று தாம் அதிகாரத்திற்கு வரவில்லை எனவும் அவர் மேலும் கூறினார்.

Source : newsfirst

Back to top button