செய்திகள்

யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்று காலை இடம்பெற்றது என்ன ? – முழு விபரம்

யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடித்தழிக்கப்பட்ட நிலையில் , மீண்டும் அதே இடத்தில் தூபியினை நிறுவும் நோக்குடன் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராசாவினால்  நினைவுக்கல் நாட்டப்பட்டது. 

யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி கடந்த வெள்ளிக்கிழமை (08.01.02021) இரவு இடித்தழிக்கப்பட்டது. 

யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்று காலை இடம்பெற்றது என்ன ? - முழு விபரம் 1

போராட்டங்கள்

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சனிக்கிழமை காலை முதல் பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டங்களை முன்னெடுத்தனர். 

தமிழகம் , வெளிநாடுகளின் பிரதிநிதிகள் பலரும் தமது கண்டனங்களை வெளிப்படுத்தி வந்ததுடன் , புலம்பெயர் நாடுகளில் உள்ளோரும் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். 

இன்றைய தினம் திங்கட்கிழமை வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கு முஸ்லீம் தரப்புக்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் தமது பூரண ஆதரவை தெரிவித்துள்ளனர். 

அதிகாலையில் மாணவர்களை சந்தித்த துணைவேந்தர்.

இந்நிலையில் யாழ்.பல்கலைக்கழக முன்றலில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களை இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை 03.00 மணியளவில் பல்கலை கழக துணைவேந்தர் நேரில் சந்தித்து,  மீண்டும் அதே இடத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியைக் கட்டுவதற்கு நடவடிக்கைகளை ஆரம்பிப்பதாக உறுதியளித்தார். 

தடுத்து நிறுத்திய பொலிஸார்

அதன் பிரகாரம் காலை 07.00 மணியளவில் மாணவர்களுடன் பல்கலைக்கழத்தினுள் செல்ல முற்பட்ட போது பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினர் தடுத்து நிறுத்தினார்கள். 

யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்று காலை இடம்பெற்றது என்ன ? - முழு விபரம் 2

அதனையும் மீறி துணைவேந்தர் மாணவர்களை அழைத்துக்கொண்டு வளாகத்தினுள் சென்று , பரமேஸ்வரன் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டார். 

யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்று காலை இடம்பெற்றது என்ன ? - முழு விபரம் 3

அதனை தொடர்ந்து நினைவு தூபி இடித்தழிக்கப்பட்ட இடத்திற்கு மாணவர்களுடன் துணைவேந்தர் சென்ற போது அங்கு வந்திருந்த கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தடுத்து நிறுத்தினார். 

கட்டுமான பணிகளை முன்னெடுக்கவில்லை

அதன் போது , துணைவேந்தர் , நாம் தற்போது எந்த கட்டுமான பணிகளிலும் ஈடுபடவில்லை. தூபி இடித்தழிக்கப்பட்ட இடத்தில் கல் நாட்டப்போறோம். என்னுடைய மாணவர்கள் மூன்று நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனை முடித்து வைக்க வேண்டிய நிலையில் உள்ளேன். எம்மை தடுக்காதீர்கள் என கூறி இருந்தார். 

அதனை அடுத்து பொலிஸ் பொறுப்பதிகாரி நினைவிடத்திற்கு செல்வதற்கு அனுமதி அளித்தார். 

தேவாரம் பாடி மலர் தூவி அஞ்சலி

நினைவிடத்திற்கு மாணவர்களுடன் சென்ற துணைவேந்தர் , தேவாரம் பாடி , மலர் தூவி நினைவு கல்லினை நாட்டினார். அதனை தொடர்ந்து மாணவர்களும் நினைவிடத்திற்கு மலர் தூவினார்கள். 

யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்று காலை இடம்பெற்றது என்ன ? - முழு விபரம் 4

மாணவர்களின் விபரங்களை பெற முயற்சி

அவற்றை முடித்துக்கொண்டு மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தினுள் இருந்து வெளியேற முற்பட்ட போது, பல்கலை கழகத்தினுள் இருந்த பொலிஸார் நினைவிடத்திற்கு சென்று வந்த மாணவர்களின் விபரங்களை பதிய முற்பட்டனர். அதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்த போது, தாம் கொரோனா நோய் தொற்று காரணமாக தான் பதிவுகளை மேற்கொள்கிறோம் என தெரிவித்தனர். 

தமது விபரங்களை பல்கலை வளாகத்தினுள் நின்று பொலிஸார் பதிவதனை மாணவர்கள் எதிர்த்தனர். அவ்வேளை அவ்விடத்திற்கு வந்த துணைவேந்தர் மற்றும் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் மாணவர்களை வெளியேற விடுமாறு பணித்தனர். அதனை அடுத்து மாணவர்களை வெளியற பொலிஸார் அனுமதித்தனர். 

முடிவுக்கு வந்தது உண்ணாவிரத போராட்டம்

உண்ணாவிரத இடத்திற்கு வந்த மாணவர்களுக்கு துணைவேந்தர் கஞ்சி வழங்கி போராட்டத்தை முடித்து வைத்தார். 

யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்று காலை இடம்பெற்றது என்ன ? - முழு விபரம் 5

Source: virakesari

Back to top button