செய்திகள்

இலங்கையில் கொரோனாவுக்கிடையே தலை தூக்கும் எலிக்காய்ச்சல்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று  பரவிவரும் பின்னணியில், எலிக் காய்ச்சல் நோயும், தலை தூக்கி வருவதாக  சுகாதார துறையினர் தெரிவிக்கின்றனர். எலிக்காய்ச்சல் காரணமாக, வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் வெலிசறை கடற்படை லெப்டினன் கொமாண்டர் ஒருவர் கடந்த 25 ஆம் திகதி உயிரிழந்தார்.

இந்நிலையில் எலிக்காய்ச்சல் நிலைமை குறித்து, சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவில் தகவல்களை தேடிய போது, இதுவரை  இவ்வருடத்தில் 1352 எலிக்காய்ச்சல் தொற்றாளர்கள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளமை தெரியவந்தது.

கடந்த ஜனவரி மாதம் 665 எலிக்காய்ச்சல் தொற்றாளர்களும்,  பெப்ர்வரி மாதம் 453 தொற்றாளர்களும்,  மார்ச் மாதம் 188 தொற்றாளர்களும்,  ஏப்ரல் மாதத்தில் இதுவரை 45  எலிக்காய்ச்சல் தொற்றாளர்களும் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவிக்கின்றது.

இதில் அதிகமான எலிக்காய்ச்சல் தொற்றாளர்கள் இவ்வருடம் இரத்தினபுரி சுகாதார மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அங்கு இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள எலிக்காய்ச்சல் தொற்றாளர்கள் எண்ணிக்கை 273 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Back to top button