செய்திகள்

6 இடங்களில் குண்டு வெடிப்பு ; 160 பேர் பலி, 370 பேர் காயம்

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற 6 குண்டு வெடிப்பு சம்பவங்களிலும் இதுவரை சுமார் 160 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் ஆகிய தேவாலயங்களிலும் குறித்த வெடிப்பு இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, கொழும்பின் பிரபல நட்சத்திர ஹோட்டல்களான ஷங்கரில்ல ஹோட்டல், சினமன் கிராண்ட் ஹோட்டல், மற்றும் லிலும் கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலிலும் குறித்த வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அந்த வகையில் கொழும்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்த 40 பேரின் சடலங்கள் தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது காயமடைந்த 295 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நீர்கொழும்பில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 68 பேருடைய சடலங்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக கட்டான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார். இதன்போது உயிரிழந்த மேலும் 25 பேரின் சடலங்கள் கட்டான தேவாலயத்தில் உள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
இந் நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசலையில் 27 பேருடைய சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதாக மட்டு.வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளதுடன், மேலும் 73 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த 6 குண்டு வெடிப்புச் சம்பவங்களில் சிக்கி இதுவரை 370 வரையில் காயமடைந்துள்ளதுடன், இவர்களுள் 9 பேர் வெளிநாட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
6 இடங்களில் குண்டு வெடிப்பு ; 160 பேர் பலி, 370 பேர் காயம் 1

Back to top button