செய்திகள்

அறிவுக்கூர்மையில் (IQ) ஐன்ஸ்டீனை விஞ்சிய 11 வயது தமிழ்ச் சிறுமி

Sources – BBC Tamil
ஒருவரது நுண்ணறிவுக்கூர்மையை (IQ – Intelligence Quotient) அளவிட நடத்தப்படும் தேர்வில் மிக அதிகபட்ச மதிப்பீட்டை பெற்று பிரிட்டனில் வாழும் 11 வயதான ஹரிப்பிரியா எனும் தமிழ்ச் சிறுமி சாதனைப் படைத்துள்ளார்.

இதன் மூலம், உலகின் தலைசிறந்த அறிவியலாளர்களாக அறியப்படும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங்ஸ் உள்ளிட்டவர்களை விட மிகுந்த அறிவுக்கூர்மை பெற்றவர் எனும் பெருமையை ஹரிப்பிரியா பெற்றுள்ளார்.

கல்வி மட்டுமின்றி, பன்மொழித்திறன், ஆடல், பாடல், இசை, விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கி வரும் பதினோரு வயதே ஆகும் ஹரிப்பிரியாவை பிபிசி தமிழ் நேர்காணல் செய்தது.

‘அரிய சாதனை’
ஒருவரது அறிவுக்கூர்மையை அளவிடுவதற்கு பல்வேறு விதமான சோதனைகள்/ தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இது நாடுக்கு நாடு அல்லது நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடுகிறது. இங்கு அறிவுக்கூர்மை என்பது ஒரு விடயத்தை எவ்வளவு விரைவாக உள்வாங்கிக் கொள்வது என்பது மட்டுமின்றி, சிக்கல்களை தீர்ப்பதில் மூளையின் செயல்பாட்டு திறனை அடிப்படையாக கொண்டுள்ளது.

அதன்படி, உலகின் புகழ்பெற்ற அறிவுக்கூர்மை சோதனை கூடங்களில் ஒன்றாக திகழும் பிரிட்டிஷ் மென்சாவின், ‘காட்டல் III பி (Cattell III B)’ எனும் தேர்வில் பங்கேற்ற பிரிட்டன்வாழ் தமிழ்ச் சிறுமியான ஹரிப்பிரியா, அத்தேர்வின் அதிகபட்ச சாத்தியமுள்ள மதிப்பீடான 162 பெற்று சாதனைப் படைத்துள்ளார். அதாவது, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங்ஸ் போன்ற பிரபல அறிவியலாளர்களின் அறிவுக்கூர்மை மதிப்பீட்டை விட இவர் இரண்டு எண்கள் அதிகமாக பெற்றுள்ளார். அதே போன்று, பிரிட்டிஷ் மென்சாவின் மற்றொரு அறிவுக்கூர்மை தேர்வான ‘கல்ச்ர் பார் (Culture Fair Scale)’ என்பதிலும் அதிகபட்ச மதிப்பீடான 140ஐ பெற்று அசத்தியுள்ளார்.

ஹரிப்பிரியா

ஹரிப்பிரியாபடத்தின் காப்புரிமை RADHAKRISHNAN

கடந்த 25ஆம் தேதி வெளியான இந்த முடிவு குறித்து, “எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது அறிவுக்கூர்மையை பயன்படுத்தி எதிர்காலத்தில் நல்ல பல விடயங்களை செய்வதற்கு திட்டமிட்டு வருகிறேன். பிபிசியின் ஒரு தொலைக்காட்சி நிகழ்த்தியில் பங்கேற்பதற்காகவே எனது அறிவுக்கூர்மையை பரிசோதிப்பதற்கு திட்டமிட்டோம். அதன்படி, முதல் முறையாக கடந்த மே மாதத்தில் இதே தேர்வுகளை எவ்வித பயிற்சியுமின்றி தேர்வை எழுதியபோது, ஆச்சர்யமளிக்கும் வகையில், 160 மதிப்பீட்டை பெற்றேன்.

அதையடுத்து, இன்னும் திட்டமிட்டு முயற்சித்தால் நல்ல மதிப்பெண்களை பெற முடியுமென்று பெற்றோர்கள் ஊக்கமளித்தனர். எனவே, அவ்வப்போது கிடைத்த நேரத்தை பயன்படுத்தி கடந்த வாரம் இரண்டாவது முறையாக எழுதிய தேர்வில்தான் முழு மதிப்பெண்களை பெற்றுள்ளேன்” என்று ஹரிப்பிரியா விளக்குகிறார்.

அறிவுக்கூர்மை தேர்வு எதற்காக?
“அதிவிரைவாக விடயங்களை கற்றுக்கொள்வது, வழக்கத்திற்கு மாறாக பெரிய சொற்களஞ்சிய அறிவை கொண்டிருத்தல், படைப்புத்திறன், தலைமைப்பண்பு, சிக்கலை தீர்க்கும் திறன் உள்ளிட்டவைகளில் சிலவற்றையோ, பலவற்றையோ கொண்டிருக்கும் குழந்தைகள் அசாத்திய திறமையை கொண்டவர்களாக கருதப்படுகிறார்கள்” என்று கூறுகிறது மென்சாவின் விளக்கக் குறிப்பு.

தமிழகத்தின் காரைக்குடியை பிறப்பிடமாக கொண்டவரும் தற்போது பிரிட்டனிலுள்ள இந்தியாவை சேர்ந்த பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருபவருமான இராதாகிருஷ்ணனிடம், அறிவுக்கூர்மை தேர்வின் அவசியம் குறித்தும் அதன் காரணமாக கிடைக்கும் பலன்கள் குறித்தும் கேட்டபோது, “ஹரிப்பிரியாவுக்கு அசாத்திய திறமை உள்ளது என்று எங்களுக்கு தெரியும். அதை அடுத்த நிலைக்கு கொண்டுசெல்லும் முயற்சியில் இறங்கியபோதுதான், மொழித்திறன், கணிதம், அறிவியல் உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்ட மென்சாவின் அறிவுக்கூர்மை தேர்வு குறித்த விவரம் தெரியவர, அதை முயற்சித்து பார்த்து இந்த சாதனையை படைத்திருக்கிறாள்.

மென்சாவின் தேர்வில் அதிகபட்ச மதிப்பீட்டை பெற்றுள்ளதன் மூலம், எனது மகளை போன்று பிரிட்டனிலுள்ள மற்ற அறிவார்ந்த குழந்தைகள் மற்றும் வயது வந்தவர்களுக்கான பல்வேறு குழுக்களில் இணைந்து மென்மேலும் அறிவை செழுமைப்படுத்தி அதை தக்க விதத்தில் பயன்படுத்தும் வாய்ப்பு ஹரிப்பிரியாவுக்கு ஏற்பட்டுள்ளது. அதாவது, மென்சாவின் அறிவுக்கூர்மை தேர்வுகளில் 98 சதவீதத்துக்கும் மேலான மதிப்பீட்டை பெறுபவர்களுக்கே அதன் உறுப்பினராகும் வாய்ப்பு கொடுக்கப்படும்” என்று அவர் கூறுகிறார்.

“ஒரு மணிநேரம் படித்தாலே மிகப் பெரிய விடயம்”

குடும்பத்தினருடன் ஹரிப்பிரியாபடத்தின் காப்புரிமை RADHAKRISHNAN

குடும்பத்தினருடன் ஹரிப்பிரியா
ஹரிப்பிரியாவின் அசாத்திய திறமை குறித்து எந்த வயதில் தெரியவந்தது என்று காரைக்குடியை பூர்விகமாக கொண்ட அவரது தாயார் கிருஷ்ணாம்பாளிடம் கேட்டபோது, “எனது கணவரது வேலையின் காரணமாக ஹரிப்பிரியா அவளது மழலை கால கல்வியை பெங்களூருவில் பயின்றாள். அவளுக்கு சுமார் நான்கு வயது இருக்கும்போது, ஆஸ்திரேலியாவுக்கு செல்ல நேரிட்டது. இருப்பினும் இடைப்பட்ட நேரத்தில் பெங்களூருவிலுள்ள நடத்தப்படும் பாடத்தை ஆஸ்திரேலியாவில் இருந்தவாறே படித்தாள். பின்பு நானும் எனது மகளும் மட்டும் பெங்களூருவுக்கு திரும்பியபோது, நேரடியாக பள்ளியின் அரையாண்டுத் தேர்வை எழுதி, அதில் மற்ற மாணவர்களை நல்ல மதிப்பெண்களை எடுத்து ஆச்சர்யப்படுத்தினாள்.

அதேபோன்று, தமிழ் மட்டுமின்றி கன்னடம், இந்தி போன்ற மொழிகளையும் வெகுவிரைவில் கற்றுக்கொள்ள ஆரம்பித்ததுடன், நாங்கள் 2015ஆம் ஆண்டு பிரிட்டனுக்கு வந்தவுடனேயே ஆங்கிலத்தில் எவ்வித சிரமமும் இல்லாமல் உள்நாட்டு மாணவர்களைவிட சிறப்பாக செயல்பட்டு வருகிறாள்” என்று கூறுகிறார்.

ஹரிப்பிரியாவை அவரது வயதை சேர்ந்தவர்களுடன் ஒப்பிடும்போது, எந்த வகையில் வேறுபட்டவர் என்று கிருஷ்ணாம்பாளிடம் கேட்டபோது, “தற்போது ஆறாவது வகுப்பு படித்து வரும் ஹரிப்பிரியா பள்ளிக்கல்வியில் முதன்மையான நிலையை பெறுவது என்பது வழக்கமான ஒன்று; ஆனால், அதற்கு அவள் செலவிடும் நேரமோ மிகவும் குறைவானது. ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் அவள் பள்ளிப் படித்தாலே அது மிகப் பெரிய விடயம். பள்ளித் தேர்வுகளை எவ்வித பதற்றமும் இல்லாமல் எப்போதும்போல் எதிர்கொள்வாள்.

இதை தவிர்த்து, நாங்கள் நாடு விட்டு வந்து வாழ்ந்தாலும் எங்களது மொழி, பண்பாட்டு மற்றும் கலாசார அடையாளத்தை இழந்துவிட கூடாது என்பதால் ஒவ்வொரு நாளும் தமிழ் மொழி, கர்நாடக சங்கீதம், இசை, பாரத நாட்டியம் போன்றவற்றை கற்றுவருவதுடன் அதில் சிறந்த நிலையையும் பெற்று வருகிறார். குறிப்பாக, ஐரோப்பாவிலுள்ள 84 நாடுகளில் நடத்தப்படும் தமிழ் மொழித் தேர்வுகளில் இரண்டாண்டுகள் சிறப்பு நிலையை பெற்று பரிசு பெற்றுள்ளார். மேலும், கூடைப்பந்தாட்டம், ஹாக்கி மற்றும் கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளிலும் பங்கேற்று வருகிறார்” என்று அவர் பெருமிதத்துடன் கூறுகிறார்.

வருங்காலத்தில் என்னவாக போகிறார் இவர்?

ஹரிப்பிரியா
ஹரிப்பிரியா படத்தின் காப்புரிமை RADHAKRISHNAN

பிரிட்டனின் உளவு நிறுவனமான MI6இல் இணைந்து பணியாற்றுவதே தனது நோக்கம் என்று கூறுகிறார் ஹரிப்பிரியா. “நான் சிறுவயதில் மருத்துவராகவும், ஆசிரியாகவும் அல்லது விண்வெளி வீராங்கனையாகவும் விளங்க விரும்பிய நிலையில், சமீப காலமாக உளவு சம்பந்தமான புத்தகங்களை அதிகம் படித்து வருவதால் MI6 உளவு அமைப்பில் சேர்ந்து பணியாற்ற விரும்புகிறேன். எதிர்காலத்தில் இதுகூட மாறுமா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், எதை செய்வதாக உறுதிபட முடிவெடுக்கிறேனோ அதில் நான் சாதிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது” என்று அவர் கூறுகிறார்.

ஒரு அசாத்திய திறமை பெற்றவராக சக மாணவர்களுடன் பழகுவது எப்படி உள்ளது என்று அவரிடம் கேட்டபோது, “எப்போதுமே எனது திறமையை பார்த்து எனது நண்பர்கள் பாராட்டுவது வழக்கம்தான். ஆனால், சமீப காலமாக, அறிவுக்கூர்மை தேர்வு குறித்த தகவல் பள்ளியில் பரவவே நண்பர்கள் என்னைப் பார்க்கும் விதம் மாறிவிட்டதோ என்று அவ்வப்போது தயக்கம் ஏற்படுகிறது. நான் எவ்வித மாற்றமும் இன்று எனது நண்பர்களுடன் பழக விரும்புகிறேன்” என்று ஹரிப்பிரியா கூறுகிறார்.

கைமேல் வந்த வாய்ப்பு; நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம்
பிரிட்டனின் ரெட்டிங் பகுதியில் வசித்து வரும் ஹரிப்பிரியாவுக்கு அங்குள்ள நாட்டின் மிகப் பெரிய பள்ளியில் தனது கல்வியை தொடருவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், ஆனால் தனது நுழைவிசைவு (விசா) முடிவடைய உள்ளதால் இங்கிருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக இராதாகிருஷ்ணன் கூறுகிறார். “இங்கிலாந்தின் முதல் மூன்று இடங்களில் உள்ள கென்ட்ரிக் எனும் பெண்கள் பள்ளியின் நுழைவுத் தேர்வில் வெற்றிபெற்றுள்ள ஹரிப்பிரியா வரும் செப்டம்பர் மாதம் முதல் தொடங்கும் ஏழாம் வகுப்பை அங்கு தொடரும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், எனது ஐந்தாண்டுகால நுழைவிசைவு வரும் ஆகஸ்டு மாதம் 13ஆம் தேதியுடன் முடிவுறுவதால் பிரிட்டனிலிருந்து குடும்பத்துடன் வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

பிரிட்டனில் கடந்த சில காலமாக இருந்தும் வரும் நிலையற்ற அரசியல் சூழ்நிலையின் காரணமாக மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுப்பது என்பதில் தெளிவில்லாமல் இருக்கிறோம். எது என்னவோ, நாங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், அசாத்திய திறமையை கொண்டுள்ள ஹரிப்பிரியாவுக்கும், இதுவரை அறிவுக்கூர்மை தேர்வு எழுதாத நான்கு வயதாக எனது மகன் ஜெகதீஷுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து அவர்களை சாதிக்க வைப்பதே எங்களது ஒரே எண்ணம்” என்று கூறுகிறார் இராதாகிருஷ்ணன்.

Back to top button