செய்திகள்

காஷ்மீரின் (Kashmir) வரலாற்றுக் குறிப்புகள் – தேசப் பிரிவினை முதல் இப்போது வரை

Sources : – BBC Tamil

காலவரிசையின்படி முக்கிய நிகழ்வுகள் (Jammu and Kashmir)

1947 – பிரிட்டிஷ் ஆட்சி முடிவுக்கு வந்து, இந்துக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த பகுதி இந்தியா என்றும், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த பகுதி பாகிஸ்தான் என்றும் பிரிவினை ஏற்பட்டது.

1947 – பாகிஸ்தான் பழங்குடியின ராணுவத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவுடன் இணைவதாக காஷ்மீர் மகாராஜா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அந்தப் பிராந்தியம் தொடர்பாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூண்டது.

1948 – ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் காஷ்மீர் பிரச்சினையை இந்தியா எழுப்பியது. அந்தப் பகுதியின் அந்தஸ்து குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தீர்மானம் 47 கூறியது. பாகிஸ்தான் தனது படைகளை வாபஸ் பெற வேண்டும் என்றும், இந்தியா தனது ராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைந்தபட்ச அளவுக்குக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் தீர்மானம் கூறியது. போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. ஆனால் தனது படைகளை அங்கிருந்து விலக்கிக்கொள்ளபாகிஸ்தான் மறுத்துவிட்டது. நடைமுறை ரீதியில், இரு நாடுகளின் கட்டுப்பாடுடைய பகுதியாக காஷ்மீர் பிரிக்கப்பட்டு விட்டது.

வரைபடம்

1951 – இந்திய நிர்வாகத்தில் இருந்த ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில், இந்தியாவுடன் இணைந்ததற்கு ஆதரவு கிடைத்தது. இதனால் பொது வாக்கெடுப்பு தேவையற்றதாகிவிட்டது என்று இந்தியா கூறுகிறது. முன்னர் மன்னராட்சி நடைபெற்ற மாகாணம் முழுவதற்கும் சேர்த்து வாக்காளர்களின் கருத்துகளை அறிவதற்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஐ.நா.வும் பாகிஸ்தானும் கூறுகின்றன.

1953 – தேசிய மாநாட்டுக் கட்சியின் நிர்வாகத் தலைவராக இருந்த ஜம்மு – காஷ்மீர் பிரதமர் (1965ஆம் ஆண்டுக்கு பின்னரே ஜம்மு – காஷ்மீர் பிரதமர் பதவி ‘முதல்வர்’ எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது) ஷேக் அப்துல்லா, பொது வாக்கெடுப்புக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து, இந்தியாவுடன் முறைப்படி இணைவதைத் தாமதப்படுத்தியதால், இந்திய ஆதரவு அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர். ஜம்மு காஷ்மீரின் புதிய அரசாங்கம், இந்தியாவுடன் இணைந்ததற்கு ஒப்புதல் அளித்தது.

1957 – இந்திய நிர்வாகத்தில் உள்ள ஜம்மு காஷ்மீரின் அரசியல் சாசனத்தில், இந்தியாவின் ஒரு பகுதியாக அந்த மாநிலம் வரையறை செய்யப்பட்டது.

1950கள் – சீனா படிப்படியாக கிழக்கு காஷ்மீரை (அக்சய் சின்) ஆக்கிரமித்தது.

சீனாவுடன் இந்தியாவின் போர்

சீனாவோடு நடத்திய போரில் ஒரு கோட்டையை பிடித்த இந்திய ராணுவத்தினர்.
படத்தின் காப்புரிமை GETTY IMAGES
Image caption சீனாவோடு நடத்திய போரில் ஒரு கோட்டையை பிடித்த இந்திய ராணுவத்தினர்.

1962 – அக்சய் சின் பகுதியைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக சிறிய போரில் இந்தியாவை சீனா தோற்கடித்தது.

1963 – காஷ்மீரின் டிரான்ஸ்-கரகோரம் பகுதியை சீனாவுக்கு பாகிஸ்தான் விட்டுக் கொடுத்தது

1965 – காஷ்மீர் தொடர்பாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சிறிய போர் முடிவுக்கு வந்து போர் நிறுத்தம் ஏற்பட்டது. அதற்கு முந்தைய நிலைக்கு நிலைமை திரும்பியது.

1971 – 72 – இந்தியா – பாகிஸ்தான் இடையே மற்றொரு போர் ஏற்பட்டு, பாகிஸ்தான் தோல்வி அடைந்தது. அதைத் தொடர்ந்து 1972 சிம்லா ஒப்பந்தம் ஏற்பட்டது. காஷ்மீர் போர் நிறுத்த எல்லைப் பகுதியை இது கட்டுப்பாட்டு எல்லைக் கோடாக மாற்றியது. பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சனைகளைப் பேசித் தீர்த்துக் கொள்வது என்று இரு தரப்பிலும் உறுதி அளிக்கப்பட்டது. அதன் பிறகு பாகிஸ்தான் – இந்தியா உறவுகளுக்கான அடிப்படையாக இந்த ஒப்பந்தம் மாறியது.

சிம்லா ஒப்பந்தம்

பேச்சுவார்த்தைகள் மூலமாக பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது என்று ஒப்பந்தம் செய்த பிறகு கை குலுக்கிக் கொண்ட இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி (இடது), பாகிஸ்தான் அதிபர் ஜுல்பிகர் அலி பூட்டோ.
படத்தின் காப்புரிமை GETTY IMAGES
Image caption பேச்சுவார்த்தைகள் மூலமாக பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது என்று ஒப்பந்தம் செய்த பிறகு கை குலுக்கிக் கொண்ட இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி (இடது), பாகிஸ்தான் அதிபர் ஜுல்பிகர் அலி பூட்டோ.

1974 – இந்திய நிர்வாகத்தில் உள்ள ஜம்மு காஷ்மீரில் உள்ள பொது கருத்துக் கணிப்பு முன்னணி என்ற எதிர்க்கட்சி, பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை கைவிட்டது. இந்திய அரசுடன் விரிவான தன்னாட்சி அதிகாரங்களைப் பெறுவதற்கு ஒப்பந்தம் உருவானதை அடுத்து இந்தக் கோரிக்கை கைவிடப்பட்டது. ஷேக் அப்துல்லா முதல்வரானார். 1982-ல் அவருடைய மறைவுக்குப் பிறகு, தேசிய மாநாட்டுக் கட்சியிலும், மாநிலத்திலும் அவருடைய வாரிசுகள் ஆதிக்கம் செலுத்தினர்.

1984 – கட்டுப்பாட்டு எல்லைக் கோடு மூலமாக பிரித்துக் காட்டப்படாதிருந்த சியாச்சின் பனிமலை முகடு பகுதியின் கட்டுப்பாட்டை இந்திய ராணுவம் எடுத்துக் கொண்டது. அதைத் தொடர்ந்த தசாப்தங்களில், அந்தப் பகுதியைப் பிடிப்பதற்கு பாகிஸ்தான் அடிக்கடி முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

உள்நாட்டு கிளர்ச்சிகள் தொடக்கம்

1987 – இந்திய நிர்வாகத்தில் உள்ள ஜம்மு காஷ்மீரில் நடந்த சர்ச்சைக்குரிய மாநிலத் தேர்தலில், ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி (JKLF) ஆதரவுடன் சுதந்திரத்துக்கு ஆதரவாக உள்நாட்டு கிளர்ச்சிகளின் தொடக்கம் அமைந்தது. எல்லைக் கட்டுப்பாடு கோட்டைக் கடந்து தீவிரவாதிகளை அனுப்பி வைத்து, கிளர்ச்சிகளை பாகிஸ்தான் ஊக்குவிக்கிறது என்று இந்தியா குற்றஞ்சாட்டுகிறது. இதை பாகிஸ்தான் மறுக்கிறது.

1990 – கவக்கடால் பாலத்தில் போராட்டக்காரர்கள் சுமார் 100 பேரை இந்திய ராணுவம் கொன்றதை அடுத்து உள்நாட்டுப் கிளர்ச்சிதீவிரம் அடைந்தது. தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் காரணமாக காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் இருந்து, ஏறத்தாழ அனைத்து இந்துக்களும் அங்கிருந்து வெளியேறினர். ஜம்மு காஷ்மீரில் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டத்தை (AFSPA) இந்தியா அமல் செய்தது.

ஜம்மு காஷ்மீரில் இந்திய படையினர் கடும் எதிர்ப்பை சந்தித்து வருகின்றனர்.
படத்தின் காப்புரிமை GETTY IMAGES
Image caption ஜம்மு காஷ்மீரில் இந்திய படையினர் கடும் எதிர்ப்பை சந்தித்து வருகின்றனர்.

1990கள் – கிளர்ச்சிகள் தொடர்ந்தன. காஷ்மீர் தீவிரவாதிகள் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றனர். ஜம்மு காஷ்மீரில் ஆயிரக்கணக்கில் ராணுவத்தினரை இந்தியா பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியது. இரு தரப்பினராலும் பொது மக்களுக்கு எதிரான வன்முறைகள் பரவலாக நடந்தன.

1999 – பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீர் பகுதியில் இருந்து, இந்திய நிர்வாகத்தில் உள்ள கார்கில் மாவட்டத்துக்குள் தீவிரவாதிகள் ஊடுருவியதை அடுத்து மீண்டும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் மூண்டது. ஆக்கிரமிப்பாளர்களை இந்தியா விரட்டி அடித்தது. அந்தச் சம்பவத்தின் பின்னணியில் பாகிஸ்தான் இருந்தது என்று இந்தியா குற்றஞ்சாட்டி, உறவுகளை முறித்துக் கொண்டது.

2001 – 2004 – இரு நாடுகளுக்கும் இடையில் உறவுகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகள், தொடரும் வன்முறைகளால், குறிப்பாக இந்திய நிர்வாகத்தில் உள்ள ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தின் மீது 2001ல் நடந்த தாக்குதலால், பாதிக்கப்பட்டது.

2010 – இந்திய நிர்வாகத்தில் உள்ள ஜம்மு காஷ்மீரில் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் போராட்டக்காரர் ஒருவர் இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்டதை அடுத்து பெரிய போராட்டங்கள் வெடித்தன. பதற்றத்தைத் தணிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு அறிவித்ததைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் போராட்டங்கள் தணிந்தன.

2011 ஆகஸ்ட் – காஷ்மீர் பள்ளத்தாக்கில் அரசுக்கு எதிராக முந்தைய ஆண்டு போராட்டங்கள் நடந்தபோது, பாதுகாப்புப் படையினர் மீது கற்கள் வீசிய குற்றச்சாட்டுக்கு ஆளான 1,200 இளைஞர்களுக்கு முதல்வர் உமர் அப்துல்லா பொது மன்னிப்பு வழங்கினார்.

கட்டுப்பாட்டு எல்லைக் கோடு அருகே, குறியீடு செய்யப்படாத கல்லறைகளில் அடையாளம் கண்டறியப்படாத 2,000 -க்கும் மேற்பட்ட உடல்கள் உள்ளன என்பதை இந்திய அரசு மனித உரிமைகள் ஆணையம் உறுதி செய்கிறது. பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட பிறகு பலர் காணாமல் போயிருக்கலாம் என்று செயல்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

அழகான இடங்களை கொண்டுள்ள ஜம்மு காஷ்மீர், சர்ச்சைக்குரிய கடந்த காலத்தை கொண்டுள்ளது.
படத்தின் காப்புரிமை GETTY IMAGES
Image caption அழகான இடங்களை கொண்டுள்ள ஜம்மு காஷ்மீர், சர்ச்சைக்குரிய கடந்த காலத்தை கொண்டுள்ளது.

2011 செப்டம்பர் – கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டைக் கடந்து நடந்த துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மூன்று பேரை இந்திய ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். முதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர்தான் சுட்டார்கள் என இந்தியா குற்றஞ்சாட்டியது.

2013 பிப்ரவரி – இந்திய நாடாளுமன்றத்தின் மீது 2001 ஆம் ஆண்டு நடந்த தாக்குதலில் ஈடுபட்டவர் என்ற காரணத்தால் காஷ்மீரி ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த முகமது அப்சல் குரு தூக்கிலிடப்பட்டார். இதனால் ஏற்பட்ட போராட்டங்களில் இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.

2013 செப்டம்பர் – இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்கள் சந்தித்து, காஷ்மீரில் சர்ச்சைக்குரிய எல்லையில் வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கையைக் குறைக்க முயற்சி எடுப்பதற்கு ஒப்புக்கொண்டனர்.

2014 ஆகஸ்ட் – இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாகக் குற்றஞ்சாட்டி பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைகளை இந்தியா ரத்து செய்தது. பேச்சுவார்த்தைகள் நடக்கவிருந்த சமயத்துக்கு முன்னதாக காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர்களை, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதர் சந்தித்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சர்ச்சைக்குரிய எல்லைக்குச் சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, காஷ்மீரில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் நிழல் யுத்தம் நடத்தி வருகிறது என்று குற்றஞ்சாட்டினார்.

ராணுவ வீரர்கள்படத்தின் காப்புரிமை GETTY IMAGES

2014 அக்டோபர் – பொது எல்லைப் பகுதியில் ஏற்பட்ட வன்முறையால் பொது மக்களில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, பாகிஸ்தானும் இந்தியாவும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தன.

ஜம்மு காஷ்மீரில் பாஜக ஆட்சிக்கு வந்தது

2015 மார்ச் – இந்தியாவின் ஆளும் பாஜக, இந்திய நிர்வாகத்தில் உள்ள ஜம்மு காஷ்மீரில் முதன்முறையாக மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தது. மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த முஃப்தி முகமது சயீத் முதல்வராகப் பொறுப்பேற்றார்.

2015 செப்டம்பர் – இந்திய நிர்வாகத்தில் உள்ள ஜம்மு காஷ்மீரில், மாட்டிறைச்சி சாப்பிடுவதற்கு தடை விதித்து, பிரிட்டிஷ் காலத்து சட்டத்தை அமல் செய்ததை எதிர்த்து நடந்த போராட்டத்தில் கடைகள், வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்களை முஸ்லிம் பிரிவினைவாதத் தலைவர்கள் மூடினர்.

2015 நவம்பர் – இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீருக்கு பிரதமர் நரேந்திர மோதி சென்றதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறைப் போராட்டங்களில் ஒருவர் உயிரிழந்தார்.

2016 ஏப்ரல் – மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரான மெகபூபா முஃப்தி, இந்திய நிர்வாகத்தில் உள்ள ஜம்மு காஷ்மீரின் முதலாவது பெண் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அவருடைய தந்தையும், கட்சியின் தலைவருமான முஃப்தி முகமது சயீத் மறைவைத் தொடர்ந்து அவர் இந்தப் பொறுப்பை ஏற்றார்.

விமானப்படை
படத்தின் காப்புரிமை GETTY IMAGES

புர்ஹான் வானி கொலை

2016 ஜூலை – பிரபலமாக இருந்த தீவிரவாதியும், ஹிஜ்புல் முஜாஹிதின் அமைப்பின் முக்கிய கமாண்டராக இருந்தவருமான புர்ஹான் வானி என்பவரை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றதை அடுத்து, வன்முறைப் போராட்டங்கள் உருவானதால், இந்திய நிர்வாகத்தில் உள்ள ஜம்மு காஷ்மீரில் பெரும்பாலான பகுதிகளில் காலவரையின்றி ஊரடங்கு உத்தரவு அமல் செய்யப்பட்டது.

2016 ஆகஸ்ட் – இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு நீக்கப்பட்டது. ஆனால் பள்ளிகள், கடைகள், பெரும்பாலான வங்கிகள் தொடர்ந்து மூடப்பட்டிருந்தன. செல்போன் மற்றும் இணையதள சேவைகள் தொடர்ந்து நிறுத்தி வைக்கப் பட்டிருந்தன. 50 நாட்களுக்கும் அதிகமாக நடந்த வன்முறைகளில் பொது மக்கள் 68 பேரும் பாதுகாப்புப் படையினர் இரண்டு பேரும் கொல்லப்பட்டனர் என்றும், 9,000 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர் என்றும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

2016 செப்டம்பர் – இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில், நடந்த துப்பாக்கிச் சண்டையில் இந்திய வீரர்கள் 18 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, இந்தியாவும், பாகிஸ்தானும் கடுமையான குற்றச்சாட்டுகளைக் கூறின.

2016 செப்டம்பர் – காஷ்மீரை ஒட்டிய பாகிஸ்தான் எல்லையில், தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படுவர்களுக்கு எதிராக “துல்லியத் தாக்குதல்கள்” நடத்தியதாக இந்தியா கூறியது. ஆனால், அதை பாகிஸ்தான் மறுத்தது.

2016 அக்டோபர் – வடக்கு காஷ்மீரில் ராணுவ முகாம் ஒன்றில் நுழைய முயன்ற, தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்பட்ட மூன்று பேரை இந்திய ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.

2016 நவம்பர் – இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் ஜூலை மாதம் தொடங்கிய பிரிவினைவாத ஆதரவு போராட்டங்களால் தீ வைப்பு சம்பவங்களின் எண்ணிக்கை 25 ஐ தொட்டதை அடுத்து, பள்ளிகளுக்கு தீ வைப்பதைக் கைவிட வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் அமைப்பு வேண்டுகோள் விடுத்தது.

2016 நவம்பர் – கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டை ஒட்டிய பகுதியில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ராணுவத்தினர் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டதில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் ஏழு பேர் கொல்லப்பட்டதை அடுத்து, வன்முறைகள் அதிகரித்ததால், பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் ஊரைவிட்டு வெளியேற்றப்பட்டனர்.

காஷ்மீர்படத்தின் காப்புரிமை GETTY IMAGES

2017 மே – கிளர்ச்சியாளாராக இருந்த சப்ஜர் அஹமது பட-ன் இறுதிச் சடங்கில், பங்கேற்க இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் ஆயிரக்கணக்கானவர்கள் ஊரடங்கு உத்தரவை மீறினர்.

2017 ஜூலை – தீவிரவாத கமாண்டர் பர்ஹன் வானி இறந்த ஓராண்டு நிறைவை ஒட்டி, இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் வன்முறை மோதல்கள் ஏற்பட்டன.

2017 ஜூலை – இந்து யாத்ரிகர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர். 16 பேர் காயமடைந்தனர். 2000-வது ஆண்டுக்குப் பிறகு நடந்த மிக மோசமான தாக்குதலாக அது அமைந்தது.

2018 பிப்ரவரி – ஜம்முவில் உள்ள சன்ஜவான் ராணுவத் தளத்தில் ஜெய்ஷ்-இ-முகமது நடத்திய தாக்குதலில் ஆறு இந்திய ராணுவத்தினர் உள்பட 11 பேர் கொல்லப்பட்டனர். இறந்த வீரர்களின் இறுதி ஊர்வலத்தில் பொதுமக்களும் பங்கேற்கின்றனர்.

2018 ஜூன் – பாரதிய ஜனதா ஆதரவை விலக்கிக்கொண்டதால், கூட்டணி அரசுக்குத் தலைமை வகித்த மெகபூபா முஃப்தி பதவி விலகுகிறார். மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வருகிறது.

2018 – கடந்த 10 ஆண்டுகளில் அதிக வன்முறை மற்றும் உயிரிழப்புகளைச் சந்தித்த ஆண்டு 2018 என பாதுகாப்பு அமைப்புகளின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இறந்தவர்களில் பாதிக்கும் மேலானவர்கள் ஆயுதப் போராட்டக் குழுக்களை சேர்ந்தவர்கள்.

2019 பிப்ரவரி – புல்வாமாவில் துணை ராணுவப்படையினர் மீது ஜெய்ஷ்-இ-முகமது நடத்திய தாக்குதலில் 40க்கும் மேலான படையினர் கொல்லப்பட்டனர். இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் பதற்றம் தொடங்குகிறது. பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியாவும், இந்திய எல்லைக்குள் பாகிஸ்தானும் நுழைந்து மாறி மாறித் தாக்குதல் நடத்துகின்றன.

இலங்கை

சட்டப்பிரிவு 370

சட்டப்பிரிவு 370 மற்றும் 35Aபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

2019 ஜூலை: இந்திய ஆளுகையின் கீழ் உள்ள காஷ்மீரில் அதிகளவில் துணை ராணுவ படையை நிறுத்தியது இந்திய அரசு. அமர்நாத் பயணிகளை குறிவைத்து பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை அளித்த தகவல்களை அடிப்படையாக வைத்தும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிலவும் பாதுகாப்பு நிலைமையை கருத்தில்கொண்டும் அமர்நாத் பயணிகள் உடனடியாக பள்ளத்தாக்கில் இருந்து வெளியேற வேண்டும் என்று ஜம்மு காஷ்மீர் மாநில உள்துறை கேட்டுக்கொண்டது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் அரசியலமைப்பின் 35-ஏ பிரிவு மற்றும் 370 வது பிரிவை ரத்து செய்ய பா.ஜ.க அரசு முயல்வதாக தகவல்கள் பரவின.

காஷ்மீர் வரலாற்றுக் குறிப்புகள்: தேசப் பிரிவினை முதல் இப்போது வரை
படத்தின் காப்புரிமை GOI

2019 ஆகஸ்ட்: இந்திய அரசமைப்பின் சட்டப்பிரிவு 370 வழங்கிய சிறப்புரிமை ரத்து செய்யப்பட்டது.

Back to top button