செய்திகள்

சீனாவில் 132 பயணிகளுடன் விமானம் நொறுங்கி விபத்து

சீனாவில் 132 பேருடன் விமானம்நொறுங்கி விபத்துக்குள்ளான செய்தியில், மேலதிக தகவல்களை சீன அரசு ஊடகமான ‘குளோபல் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

சீனாவின் வடகிழக்கு நகரமான யீச்சூனில் கடந்த 2010ஆம் ஆண்டில் நடைபெற்ற விமான விபத்துக்குப் பிறகு நடைபெற்ற முதல் விமான விபத்து இதுவாகும்.

MU5735 விமானம் குன்மிங்கில் இருந்து உள்ளூர் நேரப்படி பகல் 1:15க்கு (05:15 GMT) புறப்பட்டு குவாங்சோவுக்குச் சென்று கொண்டிருந்தது. இந்த விமானம் மதியம் 03:07-க்கு குவாங்சோவை அடைந்திருக்க வேண்டும்.

இந்த விமானத்தில் 123 பயணிகள், 9 விமானக்குழுவினர் என, 132 பேர் பயணித்தனர்.

தற்போது நிகழ்விடத்திற்கு மீட்புக்குழுவினர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பாக, சீன ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை தொடர்புகொள்ள இயலவில்லை.

இந்த விபத்து தொடர்பாக, தீயணைப்பு அதிகாரி ஒருவர் ‘குளோபல்’ டைம்ஸ்’ ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், “25 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 117 தீயணைப்புப் படையினரை விபத்து நிகழ்ந்த இடத்திற்கு அனுப்பியுள்ளோம். ஆனால், அந்த பகுதி மிகவும் தொலைதூரத்தில் அமைந்துள்ள மலைப்பகுதியாகும். எனவே, தீயணைப்பு வாகனங்கள் அந்த பகுதியை அடைய முடியவில்லை. தீயணைப்புப் படையினர் நடந்தே அந்த இடத்திற்கு சென்றுள்ளனர்” என தெரிவித்தார்.

விபத்துக்குள்ளான போயிங் 737 ரக விமானம் சுமார் ஆறரை ஆண்டுகளாக இயங்கிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானத்தில் மொத்தமாக 162 இருக்கைகள் உள்ளன. இதில், 12 பிசினஸ் வகுப்பு இருக்கைகள் மற்றும் 150 பொருளாதார வகுப்பு இருக்கைகள் ஆகும்.

Back to top button