செய்திகள்

2019 விகாரி வருட தமிழ் புத்தாண்டு மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கான பலன்கள்

மேஷ ராசிக்கான பலன் பார்க்க இங்கே செய்யவும்

துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கான பலன் பார்க்க இங்கே செய்யவும்


மகர ராசிக்காரர்களே! எதிலும் தேவை கவனம்


விகாரி தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறக்கிறது.
அந்தவகையில் கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பொறுத்து மகர ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.
(உத்ராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதம் வரை)
மகர ராசி நேயர்களே,
விகாரி வருடம் பிறக்கும் பொழுதே உங்கள் ராசிநாதன் சனி விரய ஸ்தானத்தில் இருக்கின்றார். அவரோடு குருவும், கேதுவும் இணைந்திருக்கின்றார். எனவே சுபவிரயங்கள் அதிகரிக்கும் வருடமாக இந்த வருடத்தைக் கருதலாம்.
புத்திரகாரகன் குரு விரய ஸ்தானத்தில் தனது சொந்த வீட்டில் சஞ்சரிப்பதால் பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி செலவிடும் சூழ்நிலை அதிகரிக்கும்.
6-ல் ராகு இருப்பதும், அதைக் குரு பார்ப்பதும் சிறப்பானதாகும். எனவே அஷ்டலட்சுமி யோகம் உங்களுக்கு செயல்படப் போகின்றது. எதிர்பார்த்த தொகை உங்களுக்கு எதிர்பார்த்த படியே வந்து சேரும்.
வருடத்தொடக்க நாளில் சப்தம ஸ்தானாதிபதி சந்திரன் சப்தம ஸ்தானத்திலேயே சஞ்சரிக்கின்றார். எனவே கல்யாணக்கனவுகள் நனவாகும் ஆண்டாகவே இந்த ஆண்டு அமையப்போகின்றது.
திருமணம் பேசுகின்றவர்களுக்கு சர்ப்பதோஷம் இருக்கின்றதா? செவ்வாய் தோஷம் இருக்கின்றதா? 7-ல் சனி இருக்கிறாரா? அல்லது சனி செவ்வாய் பார்வை அல்லது சேர்க்கை இருக்கின்றதா என்பதை எல்லாம் அலசி ஆராய்ந்து பொருத்தம் பார்ப்பதே உத்தமம்.
தனுசு குருவின் சஞ்சாரம்
(14.4.2019 முதல் 17.5.2019 வரையிலும், மீண்டும் 28.10.2019 முதல் 13.4.2020 வரையிலும்)
இக்காலத்தில் குருவினுடைய பார்வை 4, 6, 8 ஆகிய இடங்களில் பதிகின்றது. சுக ஸ்தானத்தைக் குரு பார்ப்பதால் சுகக்கேடுகள் அகலும்.
தன்னம்பிக்கை கூடும். தாய்வழி ஆதரவோடு தனித்து இயங்க முற்படுவீர்கள். வாகனங்களை வாங்கும் யோகம் உண்டு. எதிரிகள் விலகிச்செல்வர். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் உன்னதமான இடம் அமையும். உதிரிவருமானம் பெருகும். உழைப்பிற்கேற்ற பலனும் கிடைக்கும்.
பணிநிரந்தரம் பற்றிய தகவல் ஒருசிலருக்கு வந்து ஆச்சரியத்தில் ஆழ்த்தும். கூடுதல் சம்பளத்திற்கு வெளிமாநிலங்களுக்குச் செல்லலாமா என்று சிந்தித்தவர்களுக்கு இப்பொழுது நண்பர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரப்போகின்றது.
4-ம் இடம் என்பது தாய் ஸ்தானம் என்று கருதப்படுவதால் தாய்வழி ஆதரவு கூடுதலாக இருக்கும். உறவினர் களின் ஒத்துழைப்பு கூடுதலாகக் கிடைக்கும்.
திறமை பளிச்சிடும் இந்த நேரத்தில் கேட்ட இடத்தில் உதவிகளும் கிடைக்கும். கூட்டு முயற்சிகளில் இருந்து விலகி தனித்தியங்க முற்படுவீர்கள். வீடுகட்ட வேண்டும் அல்லது வாங்க வேண்டும் என்று சிந்தித்தவர்களுக்கு பூமியோகம் இப் பொழுது செயல்படப்போகின்றது.
6-ம் இடத்தைக் குரு பார்ப்பதால் பக்கபலமாக இருக்கும் நண்பர்கள் பணமழையில் நனைய வழிவகுத்துக் கொடுப்பர்.
சிக்கல்கள் தீரும். சிரமங்கள் மாறும். தக்க விதத்தில் பொருளாதார நிலை உயரும். பரம்பரைச் சொத்துக்களில் இருந்த சண்டை சச்சரவுகள் அகன்று சாமாதானக் கொடிபறக்கப் போகின்றது. வாங்கிய கடனைக் கொடுத்துமகிழ்வீர்கள். மனக்கசப்புகள் மாறும்.

என்றைக்கோ வாங்கிப்போட்ட இடம் இப்பொழுது பலமடங்கு விலை உயர்ந்து விற்பனையாகி மிதமிஞ்சிய பொருளாதாரத்தை உருவாக்கப் போகின்றது. முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருந்தவர்கள் விலகுவர். உடல்ஆரோக்கிய குறைபாட்டின் காரணமாக ரண சிகிச்சை செய்துதான் குணமாக்க வேண்டும் என்று சொன்ன மருத்துவர்கள் இப்பொழுது சாதாரண சிகிச்சையிலேயே குணமாக்கிவிடுவர்.
போராட்டநிலை மாறும். மனப் போராட்டங்கள் அகலும். மதிப்பும், மரியாதையும் உயரும். இழப்புகளை ஈடுசெய்ய எடுத்த முயற்சிகள் வெற்றி தரும். உத்தியோகம் பார்த்த இடத்தில் இடமாற்றங்கள் பரிசீலனையில் இருக்கலாம்.
இப்போது அது உறுதியாகி எதிர்பார்த்தபடியே இட மாற்றமும் கிடைக்கும். அலைச்சல் அதிகரித்தாலும் ஆதாயம் உண்டு.
உழைப்பு மட்டும் அதிகரிக்கும் நேரமிது. உணவு உண்ணும் நேரம் கூட ஒதுக்க முடியாத அளவிற்கு உத்தியோகத்தில் வேலைப்பளு கூடலாம். எனவே ஆரோக்கியத்தில் சிறு சிறு தொல்லைகள் ஏற்பட்டு அகலும். பொதுவாக கை, கால்களில் வலி ஏற்படலாம். உங்களுடைய ஆற்றலை வெளிக்கொணர வைக்கும் நேரத்தில், மூட்டுவலி, முழங்கால்வலி போன்றவைகள் ஏற்பட்டு, அவதிப்பட வைக்கலாம். எனவே இக்காலத்தில் குரு பிரீதி செய்வது நல்லது.
விருச்சிக குருவின் சஞ்சாரம்
(18.5.2019 முதல் 28.10.2019 வரை)
இக்காலத்தில் குரு பகவான் வக்ர இயக்கத்தில் சஞ்சரிக்கின்றார். குறிப்பாக 7.8.2019 வரை வக்ர இயக்கத்திலும் பிறகு வக்ர நிவர்த்தியாகி விருச்சிகத்திற்குள்ளேயே உலா வருகின்றார்.
இதன் பலனாக உங்களுக்கு நல்ல மாற்றங்கள் வந்து சேரப்போகின்றது. குருவின் பார்வை 3, 5, 7 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே வெற்றிகள் ஸ்தானம், புத்திர ஸ்தானம், களத்திர ஸ்தானம் ஆகிய மூன்று இடங்களும் புனிதமடைகின்றன. எனவே உடன்பிறப்புகள் உங்களுக்கு உறுதுணையாக விளங்குவர்.
உங்கள் தொழில் முயற்சிக்கு அவர்களது மேற்பார்வை கைகொடுக்கும். நீண்ட நாட்களாக விலகியிருந்த சொந்தங்கள் எல்லாம் இப்பொழுது சமரசத்திற்கு முன்வருவர். பஞ்சாயத்துக்களும், பாகப்பிரிவினைகளும் இனி சாதகமாக முடியும். தொழிலில் சகோதர கூட்டுக்கள் உருவாகலாம்.
5-ம் இடத்தைக் குரு பார்ப்பதால் புத்திரப்பேறுக்காக காத்திருப்பவர் களுக்கு அது கைகூடலாம். மேலும் புத்திரப்பேறு வாய்க்காதவர்கள் இப்பொழுது பஞ்சமாதிபதி இருக்கும் பாதசார பலமறிந்து அதற்குரிய ஸ்தல வழிபாடுகளை முறையாக மேற்கொண்டால், புத்திரப்பேறு வாய்க்கும்.
கல்யாண வயதடைந்த பிள்ளை களுக்கு திருமணப் பேச்சுக்கள் முடிவாகி ஊரார் வியக்கும் விதத்தில் உன்னதமாக திருமணங்களை நடத்திக் காட்டுவீர்கள். மேற்படிப்பிற்காக பிள்ளைகள் வெளிநாடு செல்ல நினைத்தால் அதற்காக செய்த முயற்சிகள் கைகூடும்.
சப்தம ஸ்தானத்தை குரு பார்ப்பதால் இல்லறம் இனிதாக அமையும். குடும்பத்தில் உள்ளவர்களின் குறை களைப் போக்க முன்வருவீர்கள். வெளிநாட்டு யோகம் விரும்பியபடியே அமையும். மனையில் மங்கல ஓசை கேட்கும் வாய்ப்பு உருவாகும் நேரமிது.
அயல்நாட்டு பயணங்களும் கை கூடலாம். உத்தியோகத்தில் உள்ள சக பணியாளர்களும் வெளிநாடு சென்று வந்து கொண்டிருக்கிறார்களே, நம்மை நம்முடைய தொழில் நிலையம் வெளிநாடு அனுப்ப முன்வரவில்லையே என்று நினைக்கலாம்.
ஏழரைச்சனி நடக்கின்ற பொழுது நீங்கள் வெளிநாடு சென்றாலும் நிம்மதி கிடைக்காது. பெரும் தொகையொன்றை பணம்கட்டிவிட்டு சென்று பின்பு வேலை கிடைக்காமல் திரும்பும் சூழ்நிலை சிலருக்கு உண்டு. எனவே பயணம் செய்பவர்கள் தங்கள் ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்துவிட்டுச்செல்வது நல்லது.
சனியின் சஞ்சார நிலை
ஆண்டு முழுவதும் சனி பகவான் உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் தான் இருக்கின்றார். விரயச்சனியாக உலா வருகின்றார். இடையில் 8.5.2019 முதல் 3.9.2019 வரை தனுசு ராசியிலேயே வக்ரம் பெறுகின்றார். சனியின் பார்வை 2, 4. 9 ஆகிய இடங்களில் பதிகின்றது.
உங்கள் ராசிநாதனாகவும், தனாதிபதியாகவும் விளங்கும் சனி பகவான் உங்களுக்குரிய பலன் களையே வழங்குவர். இக்காலத்தில் செலவுகள் கூடுதலாக இருக்கும்.
சிறுசிறு பிரச்சினைகளை வளரவிடாமல் பார்த்துக்கொள்வது நல்லது. குடும்ப உறுப்பினர்களுக்கு நீங்கள் என்னதான் பாடுபட்டுக் காரியங்களை முடித்துக்கொடுத்தாலும் அவர்கள் நன்றிகாட்ட மாட்டார்கள். சனியின் வக்ர காலத்தில் கவனம் தேவை.
ராகு-கேதுக்களின் சஞ்சாரம்
உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் ராகுவும், 12-ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிக்கின்றார்கள். சாயா கிரகங்கள் என்று வர்ணிக்கப்படும் அந்தக் கிரகங்கள் இருக்கும் இடத்தையும், அந்த இடத்திற்கு அதிபதியையும் பொறுத்தே பலன்கள் கொடுக்கும். குறிப்பாக கேதுவோடு கூடியிருக்கும் குரு, ராகுவைப் பார்க்கின்றார்.
எனவே தோஷங்கள் அனைத்தும் அகன்று யோகங்கள் உங்களுக்கு வரப்போகின்றது. தேக நலனில் தெளிவு பிறக்கும். செல்வ நிலை ஒருபடி உயரும். வேகமாக சில காரியங்கள் முடிவடையலாம். வேற்று மனிதர் களின் ஒத்துழைப்போடு நீங்கள் செய்யும் கூட்டு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
சனி-செவ்வாய் பார்வைக்காலம்
(14.4.2019 முதல் 23.6.2019 வரை)
இக்காலம் நீங்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய காலமாகும். கட்டிய மனையால் தொல்லை, கடமையில் தொய்வு ஏற்படும்.
ஒட்டி உறவாடிய நண்பர்கள் உங்களை விட்டு விலகுவர். ஊர் மாற்றங்களில் ஆர்வம், சகோதர சச்சரவுகள் போன்றவற்றைச் சந்திக்கும் நேரமிது. தாய் வழி ஆதரவு குறையும். இடம், பூமியால் சில சிக்கல்கள் உருவாகலாம். பத்திரப்பதிவில் பிரச்சினை, பிறரை விமர்சிப்பதிலும் தொல்லைகள் ஏற்படலாம்.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்
மகர ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்த ஆண்டு குடும்பச்சுமை கூடுதலாகத் தான் இருக்கும்.
கொடுக்கல் வாங்கல்களில் நிதானம் தேவை. விரய ஸ்தானத்தில் மூன்று கிரகங்கள் இருப்பதால் எதைச்செய்தாலும் யோசித்துச் செய்வது நல்லது. குடும்ப உறுப்பினர்களை கலந்த ஆலோசித்துச் செய்தால் பிரச்சினைகள் ஏற்படாது. கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும், என்றாலும் கருத்து வேறுபாடுகளும் அதிகரிக்கும்.
ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவதுதான் நல்லது. புகுந்த வீட்டிற்கு பெருமை சேர்க்கும் விதம் நடந்து கொள்வது நல்லது. தாய்வழி ஆதரவு திருப்தியாக இருக்கும். சகோதர வர்க்கத்தினரில் ஒருசிலர் மட்டுமே உங்களுக்கு உதவியாக இருப்பர். குழந்தைகளின் எதிர்கால நலன் கருதித் தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும்.
வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பக்கத்து வீட்டாரின் பகை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். பணிபுரியும் பெண்களுக்கு இடமாற்றங்கள் எளிதில் கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களுக்குரிய சலுகைகளை வழங்குவர்.
வாகன மாற்றம் செய்வது நல்லது. குலதெய் வழிபாடும், குரு, சனி, ராகு, கேதுக்களின் வழிபாடும் கூடுதல் நன்மையை வழங்கும்.
வருடம் முழுவதும் வசந்தகாலமாக வழிபாடு
வெள்ளிக்கிழமை தோறும் விநாயகர் கவசம் பாடி சர்ப்ப விநாயகரை வழிபடுவது நல்லது. சங்கடஹர சதுர்த்தி விரதமிருந்து விநாயகப் பெருமானை வழிபட்டால் சங்கடங்கள் தீரும். சந்தோஷங்கள் சேரும்.

கும்ப ராசிக்காரர்களே! யோக வாய்ப்புகள் உருவாகுமாம்

விகாரி தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறக்கிறது.
அந்தவகையில் கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பொறுத்து கும்ப ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.
(அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள் வரை)
கும்ப ராசி நேயர்களே,
விகாரி வருடத் தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும்பொழுது உங்கள் ராசிநாதன் சனி லாப ஸ்தானத்தில் குருவோடு கூடியிருக்கின்றார். அவரோடு ஞானகாரகன் கேதுவும் இணைந்து சஞ்சரிக்கின்றார்.
தன லாபாதிபதியான குருபகவான் லாப ஸ்தானத்தில் பலம்பெற்று இருந்து இந்த ஆண்டு தொடங்குவதால் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் ஆண்டாகவே கருதலாம்.
உங்கள் ராசிநாதன் சனி பகவான் லாப ஸ்தானத்திலேயே இருக்கின்றார். புகழ்மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து பல நல்ல காரியங்களை முடித்துக்கொடுப்பர்.
சனியின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் ஆரோக்கியத் தொல்லை மட்டும் உண்டு. குறிப்பாக சனி பார்வை இருக்கும் வரை சிறுசிறு தொல்லைகள் வந்து கொண்டேதான் இருக்கும்.
உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் சந்திரன் பலம் பெற்றிருக்கின்றார். எனவே உத்தியோகம் சம்பந்தமாக ஏதேனும் புது முயற்சி எடுத்தால் அதில் வெற்றி கிடைக்கும்.
வெளிநாடு சென்று சம்பாதிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டவர்களுக்கு எண்ணியபடியே காரியம் கைகூடும்.
அஷ்டமாதிபதி சூரியன் உச்சம் பெற்றுச் சஞ்சரிப்பதால் வாழ்க்கைத்துணை வழியே வளர்ச்சி கூடும். அவர்களின் வேலை வாய்ப்பு கருதி எடுத்த முயற்சி வெற்றிதரும். பிள்ளைகளாலும் உதிரி வருமானங்கள் வந்து மகிழ்ச்சியைக் கொடுக்கும். சகோதரகாரகன் செவ்வாய் சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும் அதன் பார்வை 10-ம் இடத்தில் செவ்வாய் வீட்டிலேயே பதிவதாலும் உடன்பிறப்பு கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர்.
பஞ்சம ஸ்தானத்தில் ராகுவும், லாப ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிக்கின்றார்கள். எனவே பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது.
பட்டமேற்படிப்பு படிக்க வெளிநாடு செல்லும் குழந்தை களுக்கு நீங்கள் எடுக்கும் முயற்சிகள் கடைசி நேரத்தில் கைகூடலாம். 11-ல் கேது இருப்பதால் ஆன்மிகப் பயணங்களும், சுற்றுலாக்களும் அதிகரிக்கும். இறைவழிபாட்டில் நம்பிக்கை கூடும்.
தனுசு குருவின் சஞ்சாரம்
(14.4.2019 முதல் 17.5.2019 வரையிலும், மீண்டும் 28.10.2019 முதல் 13.4.2020 வரையிலும்)
இக்காலத்தில் குருவின் பார்வை 3, 5, 7 ஆகிய இடங்களில் பதிகின்றது. வெற்றிகள் ஸ்தானம், புத்திர ஸ்தானம், களத்திர ஸ்தானம் ஆகிய இடங்கள் புனிதமடைந்து நல்ல பலன்களை வழங்கப் போகின்றது. 3-ம் இடத்தைக் குரு பார்க்கும் பொழுது முன்னேற்றங்கள் அதிகரிக்கும் என்பர். சகோதர ஸ்தானம் பலப்படுகின்றது.
எனவே உங்களை விட்டு விலகிய சகோதரர்கள் உங்களோடு வந்திணையலாம். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடிய வழிபிறக்கும். அரசுவழி உத்தியோகத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு அது கை கூடும். பங்காளிப்பகை மாறும். காது, மூக்கு, தொண்டை போன்றவற்றில் இருந்த பிரச்சினை அகலும்.
குருவின் பார்வை பஞ்சம ஸ்தானத்தில் பதிவதால் நல்ல முன்னேற்றங்கள் உங்களுக்கு வந்து சேரும். அடிப்படை வசதிகள் பெருகும். தாய் மாமன் வழியில் இருந்த விரிசல்கள் அகலும்.
மைத்துனர் வழி ஒத்துழைப்புகள், மக்கள் செல்வங்களால் மேன்மை உண்டு. புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பணம் ஈட்டும் வழியை கண்டு கொள்வீர்கள்.

குழந்தைப் பேறு இல்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு இக்காலத்தில் பார்க்கும் மருத்துவமும், செய்யும் பரிகாரமும் கைகொடுக்கும்.
குருவின் பார்வை 7-ம் இடத்தில் பதிவதால் இல்லறம் இனிதாக அமையும். எதிர்பார்த்த வரன்கள் வீடுதேடி வரலாம். பொதுவாக உங்கள் ராசிக்கு கணப்பொருத்தம், மகேந்திரப்பொருத்தம், ராசி அதிபதிப் பொருத்தம், ரஜ்ஜூ பொருத்தம் ஆகியவை பொருந்தியிருப்பது நல்லது. விவாகத்தால் ஏற்பட்ட விவகாரங்கள் அகலும்.
வீடு மாற்றங்களும், நாடு மாற்றங்களும் ஒருசிலருக்கு வந்து சேரும். வெளிநாட்டில் இருந்து தாய்நாடு திரும்ப முடியாதவர்களுக்கு இப் பொழுது அதற்கான ஏற்பாடுகளைச் செய்தால் திரும்பி வரும் வாய்ப்பு உண்டு.
அதே போல தாய்நாட்டிலிருந்து வெளிநாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு கம்பெனியின் அழைப்பு வராமல் காத்திருக்கும் சூழ்நிலையில் இருந்தவர்களுக்கு இப்பொழுது அழைப்புகள் வந்து சேரும்.
ஏற்றுமதி, இறக்குமதி வணிகம் செய்பவர்களுக்கு இக்காலம் ஒரு இனிய காலமாகும். மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்போடு மகத்தான பலன் காண்பர்.
உங்கள் ஆற்றலும், அவர்களின் மூலதனமும் இணைந்து பலன்கொடுக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுபவர்களுக்கு இக்காலம் ஒரு இனிய காலமாகும்.
விருச்சிக குருவின் சஞ்சாரம்
(18.5.2019 முதல் 28.10.2019 வரை)
இக்காலத்தில் குரு பகவான் வக்ர இயக்கத்தில் சஞ்சரிக்கின்றார். குறிப்பாக 7.8.2019 வரை வக்ர இயக்கத்திலும், பிறகு வக்ர நிவர்த்தியாகி விருச்சிகத்திற்குள்ளேயே உலா வருகின்றார். அதன் பலனாக வாழ்வில் நல்லமாற்றங்கள் வந்துசேரும்.
குறிப்பாக அதன் பார்வை எங்கெங்கெல்லாம் பதிகின்றதோ அந்தந்த இடங்கள் எல்லாம் புனிதமடைகின்றன.
அந்த அடிப்படையில் குருவின் பார்வை 2, 4. 6 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே குடும்ப ஸ்தானம், தாய் ஸ்தானம், எதிர்ப்பு, வழக்கு, வியாதிகளைக் குறிக்கும் இடம் போன்றவற்றை குரு பார்க்கப் போகின்றார்.
பார்க்கும் குருவைப் பலப்படுத்த ஒவ்வொரு வியாழக்கிழமையும் நீங்கள் விரதமிருந்து குருவிற்குரிய கவசம் பாடி வழிபடுவதோடு குரு பீடங்களுக்கும் சென்று வழிபட்டு வரலாம். திருச்செந்தூர், திட்டை, ஆலங்குடி, குருவித்துறை, பட்டமங்கலம், திருவாலிதாயம் போன்ற ஸ்தலங்களுக்குச் சென்று சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்ளலாம்.
குருவின் பார்வை 2-ம் இடத்தில் பதிவதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். பற்றாக்குறை பட்ஜெட் மாறும். மனதில் நினைத்ததை மறுகணமே செய்து முடிக்கும் சூழ்நிலை உருவாகும்.
வாங்கல் கொடுக்கல்களை ஒழுங்குசெய்து கொள்வீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் அகலும். பிறருக்கு பணப்பொறுப்பு சொல்லி வாங்கிக்கொடுத்த தொகை தானாக வந்து சேரும்.
குருவின் பார்வை 4-ம் இடத்தில் பதிவது யோகம் தான். சுக ஸ்தானம் புனிதமடைகின்றது. எனவே சுகக் கேடுகள் அகலும். ரணசிகிச்சை செய்யக்கூடிய சூழ்நிலையில் உள்ளவர் களுக்கு இப்பொழுது சாதாரண சிகிச்சையிலேயே அது குணமாகும்.
தாய்வழி ஆதரவு உண்டு. தாயின் உடல் நலம் சீராகும். என்றைக்கோ வாங்கிப்போட்ட சொத்து இன்றைக்கு நல்ல விலைக்குப் போகும்.
கட்டிடப் பணியில் இருப்பவர்கள்,கட்டிட உபயோகப்பொருட்கள் விற்பனை செய்பவர் களுக்கு எதிர்பார்த்த நற்பலன்களும் லாபமும் கிடைக்கும்.
குருவின் பார்வை 6-ம் இடத்தில் பதிவதால் எதிரிகள் விலகுவர்.
புதிய உத்தியோகத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கு அது கைகூடும். பணியிடமாற்றங்களை விரும்புபவர்களுக்கு எதிர்பார்த்த இடம் கிடைத்து மகிழ்ச்சி காண்பர்.
சனியின் சஞ்சார நிலை
ஆண்டு முழுவதும் சனி பகவான் 11-ம் இடத்தில் சஞ்சரிக்கின்றார். இடையில் 8.5.2019 முதல் 3.9.2019 வரை அங்கிருந்து கொண்டு உங்கள் ராசியைப் பார்க்கின்றார்.
மேலும் 5, 8 ஆகிய இடங்களைப் பார்க்கின்றார். சனி பகவான் உங்கள் ராசிநாதன் மட்டுமல்ல, விரயாதிபதியாகவும் விளங்குபவர்.
எனவே இக்காலத்தில் விரயங்களும் கொஞ்சம் ஏற்படத்தான் செய்யும்.
வீடு மாற்றங்களும், இடமாற்றங்களும் ஒருசிலருக்கு உறுதியாகலாம். பிள்ளைகளால் பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். உடல்நிலையில் கொஞ்சம் பாதிப்பு ஏற்பட்டு அகலும். சனியின் வக்ர காலத்தில் கொஞ்சம் கவனமுடன் இருப்பது நல்லது.
ராகு-கேதுக்களின் சஞ்சாரம்
உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் ராகுவும், 11-ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிக்கின்றார்கள். பூர்வீக சொத்துக்களில் சில பிரச்சினைகள் தலைதூக்கலாம்.
பூமி விற்பனையில் பத்திரப் பதிவில் தாமதங்கள் ஏற்படலாம். வெளிநாட்டு முயற்சியில் தாமதங்கள் ஏற்படும். கேது, சனி இரண்டும் உங்கள் ராசியைப் பார்ப்பதால் தைரியமும், தன்னம்பிக்கையும் குறையாமல் பார்த்துக்கொள்வது நல்லது. நரம்பு, எலும்பு சம்பந்தப்பட்ட வகையில் பாதிப்புகள் ஏற்பட்டு அகலும்.
சனி-செவ்வாய் பார்வைக்காலம்
(14.4.2019 முதல் 23.6.2019 வரை)
உங்கள் ராசிநாதனாகவும், விரயாதிபதியாகவும் விளங்கு பவர் சனி பகவான். சகாய ஸ்தானாதிபதியாகவும், தொழில் ஸ்தானாதிபதியாகவும் விளங்குபவர் செவ்வாய்.
இரண்டும் ஒன்றை ஒன்று பார்ப்பதால் சகோதரத்துடன் அனுசரித்துச் செல்ல வேண்டிய நேரமிது. அலைச்சல் கூடுதலாக இருக்கும். குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட காரியங்களைச் செய்ய இயலுமா என்பது சந்தேகம் தான். சொத்துக்களாலும், சொந்தங்களாலும் சில பிரச்சினைகள் உருவாகலாம்.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்
கும்ப ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்த ஆண்டு புதிய திருப்பங்கள் பலவும் ஏற்படும் ஆண்டாக அமையும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும், வசதிகள் பெருகும்.
சென்ற வருடத்தில் நடைபெறாத சில காரியங்கள் இப்பொழுது நடைபெற்று மகிழ்ச்சியை வழங்கும். குடும்ப ஒற்றுமை பலப்படும். புகுந்த வீட்டில் உள்ளவர்கள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர். உங்கள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்க சம்மதிப்பர்.
தாய்வழி ஆதரவு திருப்தி தரும். சகோதர வர்க்கத்தினர்கள் அப்போதைக்கப்போது சச்சரவு ஏற்படுத்தினாலும் சமாதானம் அடைவர். பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்புக் கிடைத்து உதிரி வருமானம் வந்து சேரும்.
அதே நேரத்தில் ராகு-கேதுக்களின் ஆதரவு பலமாக இருப்பதால் குழந்தைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. ஒரு சிலருக்கு பிள்ளைகளால் பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். பணிபுரியும் பெண்களுக்கு பலநாட்களாக கிடைக்காத சலுகை இப்பொழுது கிடைக்கும்.
பிற மாநிலங்களில் பணிபுரிய அழைப்புகள் வரலாம். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். குலதெய்வ வழிபாடும், அனுமன் வழிபாடும் குடும்ப முன்னேற்றத்திற்கு வித்திடும்.
வருடம் முழுவதும் வசந்த காலமாக வழிபாடு
சனிக்கிழமை தோறும் விரதமிருந்து விநாயகப் பெருமானையும், அனுமனையும் வழிபடுவது நல்லது. ஏகாதசி நன்னாளில் திருமகள் கவசம் பாடி வழிபடுவதன் மூலம் விஷ்ணு, லட்சுமி அருளுக்கு பாத்திரமாகலாம்.

மீன ராசிக்காரர்களே! புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டுமாம்

விகாரி தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறக்கிறது.
அந்தவகையில் கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பொறுத்து மீன ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.
(பூரட்டாதி 4 ம் பாதம், உத்ரட்டாதி, ரேவதி வரை)
மீன ராசி நேயர்களே,
விகாரி வருடம் பிறக்கும் பொழுதே உங்கள் ராசிநாதன் குரு பகவான் 10- ம் இடத்தில் கேதுவோடும், சனியோடும் இணைந்து சஞ்சரிக்கின்றார்.
10-ல் குரு இருந்தால் பதவி மாற்றம் என்பார்கள் அதிலும் அதிசார குருவாக வரும்பொழுது கொஞ்சம் வேகம் கூடுதலாகவே இருக்கும். எனவே உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச்செல்வது நல்லது. தொழில்புரிவோருக்கு தொல்லைகள் அதிகரிக்கும்.
10-ல் சனி இருப்பதால் தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் உங்கள் மனதில் உண்டாகும். ஆனால் ஆரம்பித்த தொழிலை திருப்தியாக நடத்த இயலாது. 10-ல் சனி சஞ்சரிப்பதால் கர்ம ஸ்தானம் பலப்படுகின்றது.
எனவே குடும்ப உறுப்பினர்களில் மூத்தவர்கள் அல்லது பெற்றோர் களுக்கு வைத்தியச்செலவும், விரயங்களும் அதிகரிக்கும்.
சுக ஸ்தானத்தில் ராகு சஞ்சரிக்கின்றது. எனவே குடும்பச்சுமை கூடுதலாக இருக்கும். வீட்டுச் செலவுகள் அதிகரிக்கும். வாகனங்களால் அடிக்கடி தொல்லை ஏற்படும்.
உங்கள் ராசியிலேயே புதன் நீச்சம் பெற்று வருடம் தொடங்குவது யோகம்தான். எனவே மாமன், மைத்துனர் வழியில் இருந்த மனக்கசப்புகள் மாறும்.
விரய ஸ்தானத்தில் சுக்ரன் இருப்பதால் ஆடை, ஆபரணங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வீட்டிற்கு பக்கத்தில் உள்ள இடத்தை வாங்கி, கட்டிய வீட்டை விரிவு செய்யலாமா என்று நினைப்பீர்கள். அதற்குப் பொருத்தமான நேரமிது. வீண் விரயங்களில் இருந்த விடுபட சுபவிரயங்களை மேற்கொள்வது நல்லது.
தனுசு குருவின் சஞ்சாரம்
(14.4.2019 முதல் 17.5.2019 வரையிலும், மீண்டும் 28.10.2019 முதல் 13.4.2020 வரையிலும்)
இக்காலத்தில் குருவின் பார்வை 2, 4, 6 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே வாக்கு, தனம், குடும்பம், தாய்வழி ஆதரவு, இடம், பூமி வாங்கும் யோகம், வாகன வசதி, எதிர்ப்பு, வியாதி, கடன் ஆகியவற்றைக் குறிக்கும் இடங்களை எல்லாம் குருவின் பார்வை பதிகின்றது. எனவே அந்த இடங்கள் எல்லாம் புனிதமடைகின்றது.
உங்களுக்கு அனுகூலமான பலன்களைக் கொடுக்கும். எப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலை இருந்தாலும் குரு பார்த்தால் அதில் இருந்து விடுபடும் சூழ்நிலை உண்டு என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கின்றது. அந்த அடிப்படையில் 2-ம் இடத்தை குரு பார்ப்பதால் வறண்ட நிலை மாறி வளர்ச்சி ஏற்படும்.
கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். பேச்சுத்திறன் மிக்க உறவினர் அல்லது நண்பர்கள் பின்னணியாக இருந்து புதிய பாதை புலப்பட வழிவகுத்துக்கொடுப்பர். தங்கம், வெள்ளி, ஆடை, ஆபரணங்கள் வாங்குவதில் தனிக்கவனம் செலுத்துவீர்கள். மங்கல நிகழ்வுகள் மனையில் ஒவ்வொன்றாக நடை பெறும்.
4-ம் இடத்தைக் குரு பார்ப்பதால் தாய்வழி உறவில் இருந்த விரிசல் அகலும். இதுவரை விலகியே இருந்த பெற்றோர்கள் உங்கள் மீது பாசம் காட்டுவர். நீங்களும் பழைய தகவல்களை மறந்து விட்டுப் புதிதாக உறவைப் புதுப்பித்துக்கொள்வீர்கள். என்றைக்கோ வாங்கிப் போட்ட இடம் இப்பொழுது நல்ல விலைக்கு விற்கும்.
அதன்மூலம் வரும் வருமானத்தை மூலதனமாகக் கொண்டு தொழிலை விரிவு செய்வீர்கள். வாகனங்கள் வாங்கி மகிழ வேண்டுமே என்று ஆசைப்பட்டவர்கள் இப்பொழுது அவரவர் தகுதிக்கேற்ப வாகனங்கள் வாங்கும் முயற்சி கைகூடும். முன்னோர் சொத்துக்களில் முறையான பங்கீடு கிடைக்கவில்லையே என்று ஆதங்கப்பட்டவர்களுக்கு இப்பொழுது பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும்.
உறவினர்களில் ஒருசிலர் உங்களை விட்டு விலகியிருக்கின்றார்களே என்ற கவலை இனி அகலும். பகை மறந்து பாசம் காட்ட முன்வருவதோடு உங்கள் முன்னேற்றத்திற்கும் வழிவகுத்துக்கொடுப்பர்.
கல்வியில் இருந்த தடை அகலும். மேற்படிப்பு படிக்க வேண்டும் என்று ஆர்வமாக உள்ள குழந்தைகள் இப்பொழுது வெளிநாடு சென்று படிக்கத் தீட்டிய திட்டங்கள் நிறைவேறும்.
கட்டுமானப்பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வால் வீடு மற்றும் தொழிற்சாலை கட்டுவதில் தடைகள் ஏற்பட்டிருக்கலாம். அந்தத் தடைகள் இப்பொழுது விலகும். பாதியில் நின்ற பணி இப்பொழுது மீதியும் தொடரும். குருவின் பார்வை 6-ம் இடத்தில் ஜீவன ஸ்தானம் பலம்பெறுகின்றது. பணிநிரந்தரமாகவில்லையே என்ற கவலை இனி மாறும்.
பொதுவாக குரு இருக்கும் இடத்தைக் காட்டிலும் பார்க்கும் இடத்திற்கு பலன் அதிகம் என்பதால் குருவின் பார்வை பலனால் மேற்கண்ட காரியங்கள் அனைத்தும் துரிதமாக நடைபெறும்.
விருச்சிக குருவின் சஞ்சாரம்
(18.5.2019 முதல் 28.10.2019 வரை)
இக்காலத்தில் குரு பகவான் வக்ர இயக்கத்தில் சஞ்சரிக்கின்றார். குறிப்பாக 7.8.2019 வரை வக்ர இயக்கத்திலும், பிறகு வக்ர நிவர்த்தியாகி விருச்சிகத்திற்குள்ளேயே உலா வரப் போகின்றார். அப்போது குருவின் பார்வை உங்கள் ராசியில் முழுமை யாகப் பதிகின்றது.
எனவே அற்புதமான நேரமிது. பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். நல்ல வரன்கள் தேடிவந்து திருமணம் முடிய வழிவகுத்துக் கொடுக்கும். இடைக்காலத்தில் தடையாக இருந்தவர்கள் இனி விலகுவர். எதிர்காலம் இனிமையாக அமைய வழிபிறக்கும். புதிய ஒப்பந்தங்கள் பொருளாதாரத்தைப் பெருக்கிக் கொடுக்கும். உடல் நலம் சீராகி உற்சாகப்படுத்தும்.
3-ம் இடத்தைக் குரு பார்ப்பதால் முன்னேற்றப்பாதையை நோக்கி அடியெடுத்து வைக்க சந்தர்ப்பங்கள் கைகூடிவரும். இதுவரை பாசம் காட்டாத சகோதரர்கள் இப்பொழுது பாசம் காட்டுவர்.
நேசமனப்பான்மையோடு பழகும் நண்பர்களும் உங்கள் நிகழ் காலத் தேவைகளைப் பூர்த்தி செய்வர். பூஜை புனஸ்காரங்களிலும் கவனம் செலுத்துவீர்கள். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். உதிரி வருமானங்கள் வந்து சேரும்.
பலநாட்களாக வைத்த பஞ்சாயத்துக்கள் இதுவரை இழுபறி நிலையில் இருந்திருக்கலாம். இப்போது சாதகமாக முடியும். தனித்து இயங்கலாம் என்று முடிவு செய்வீர்கள். கூட்டாளிகளை விலக்கிவிட்டுத் தொழிலை முழுமையாக ஒப்புக்கொண்டு நடத்த முன்வரும் நேரமிது. மூத்த சகோதரத்தால் ஏற்பட்ட முட்டுக்கட்டை அகலும்.
குருவின் பார்வை 5-ம் இடத்தில் பதிவதால் வாரிசுகளின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த ஒவ்வொரு முயற்சிகளிலும் வெற்றிவாய்ப்பு வந்து கொண்டேயிருக்கும். நெருக்கடி நிலை மாறும்.
பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். சஞ்சலங்கள் அகன்று சந்தோஷங்கள் கூடும் நேரமிது. கல்வியில் சிறப்பாக தேர்ச்சி பெற்ற குழந்தைகளை மற்றவர்களும், சான்றோர்களும் பாராட்டுவதைக் கண்டு நீங்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கப் போகிறீர்கள்.
சனியின் சஞ்சார நிலை
வருடம் முழுவதும் குரு பகவான் உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில்தான் சஞ்சரிக்கப் போகின்றார். இடையில் 8.5.2019 முதல் 3.9.2019 வரை தனுசு ராசியிலேயே வக்ரம் பெறுகின்றார். சனியின் பார்வை 4,7,12 ஆகிய மூன்று இடங்களிலும் பதிகின்றது.
எனவே ஒருசில சமயங்களில் ஆரோக்கியத் தொல்லை வரத்தான் செய்யும். மாற்று மருத்துவத்தால் உடல்நலத்தை சீராக்கிக் கொள்ளலாம். களத்திர ஸ்தானத்தில் சனி இருப்பவர்களுக்கு திருமணப் பேச்சுக்கள் வந்து வந்து விட்டுப்போகலாம்.
இருப்பினும் விட்டுப்போன வரன் மீண்டும் வந்து வியப்பில் ஆழ்த்தலாம். நீண்டதூரப் பயணங்கள் ஒருசிலருக்கு வாய்க்கும். அதை ஏற்றுக்கொள்ளக் கூடிய நிர்ப்பந்தமும் உருவாகும். வெளிநாட்டு முயற்சியும் கைகூடும். சனியின் வக்ர இயக்கத்தில் விரயத்திற்கு ஏற்ற லாபம் கிடைக்கும். வீடு மாற்றங்களும், நாடு மாற்றங்களும் நன்மை தரும்.
ராகு-கேதுக்களின் சஞ்சாரம்
உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் ராகுவும், 10-ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிக்கின்றார்கள். கேது குரு வீட்டில் இருப்பதாலும், ராகுவைக் குரு பார்ப்பதாலும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது. இருப்பினும் தொழிலில் கூட்டாளிகளே உங்களுக்குத் தொல்லை கொடுக்கலாம்.
உங்களுக்கு வரவேண்டிய லாபம் ஏட்டில் இருக்குமே தவிர எதிரில் இருக்காது. வீட்டில் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் தளரவிடாமல் இருக்க வேண்டிய நேரமிது.
சனி-செவ்வாய் பார்வைக்காலம்
(14.4.2019 முதல் 23.6.2019 வரை)
இக்காலத்தில் எதிலும் கொஞ்சம் கவனமுடன் இருப்பது நல்லது. உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். 11, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. அவை இரண்டும் ஒன்றையொன்று பார்த்துக்கொள்ளும் பொழுது அரசியல் மற்றும் பொதுநலத்தில் உள்ளவர்களுக்கு திடீர் எனப் பொறுப்புகள் மாற்றப்படலாம்.
எதைச் செய்தாலும் அருகில் இருப்பவர்களின் ஆலோசனைகளைக் கேட்டுச் செய்வது நல்லது. வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு தாய்நாடு திரும்ப முடியாத சூழ்நிலை கூட உருவாகும்.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்
மீன ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்த ஆண்டு வரவும், செலவும் சமமான ஆண்டாகவே கருதலாம். ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச்செலவுகள் கூடும். உற்றார் உறவினர்களை அனுசரித்துச்செல்வது நல்லது.
குறிப்பாக குடும்ப விவகாரங்களை மற்றவர்களிடம் சொல்வதன் மூலம் வீண் பிரச்சினைகள் வரலாம், கவனம் தேவை. கணவன்-மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலமே ஒற்றுமை பலப்படும். எந்தஒரு முடிவையும் தாங்களாக எடுக்காமல் குடும்பப்பெரியவர்களை ஆலோசித்துச் செய்வது தான் நல்லது. பிள்ளைகளின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். அவர்களின் எதிர்கால முன்னேற்றமும் எதிர்பார்த்தபடி அமையும்.
தாய்வழி ஆதரவும் உண்டு. சகோதர பகை மாறும். பணிபுரியும் பெண்களுக்கு பணி நிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும். வீடு கட்டுவது, வாகனம் வாங்குவது போன்றவற்றிற்காக நீங்கள் கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தால் அது கிடைக்கும்.
அக்டோபருக்கு மேல் அயல்நாட்டு யோகம் கூட கைகூடலாம். குலதெய்வ வழிபாடும், குரு வழி பாடும் குடும்ப முன்னேற்றத்தை அதிகரிக்கச் செய்யும்.
வருடம் முழுவதும் வசந்தகாலமாக வழிபாடு
செல்வ வளம்பெருக சனிக்கிழமை தோறும் ஆதியந்தப் பிரபு வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். வியாழன் தோறும் குரு வழிபாடும் நாக கவசம் பாடி ராகு-கேதுக்களுக் குரிய ஸ்தலங்களுக்குச் சென்று வழிபட்டால் வளர்ச்சி கூடும்.
– Daily Thanthi
2019 விகாரி வருட தமிழ் புத்தாண்டு மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கான பலன்கள் 1

Back to top button