செய்திகள்

மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து நாளை ஆரம்பம் ; பஸ் சேவைகள், கட்டுப்பாடு குறித்த முழு விபரம் !

மகாணங்களுக்கிடையிலான பஸ் போக்குவரத்து சேவைகள் நாளை 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் முன்னெடுக்கப்படுமென்று போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களை தவிர, ஏனைய மாவட்டங்களுக்கு இடையில் பஸ் போக்குவரத்து சேவைகள் இடம்பெறவுள்ளன.

பஸ் போக்குவரத்து சேவைகள் காலை 4.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு மாலை 6.00 மணியுடன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

அமைச்சர் இதுதொடர்பாக தெரிவிக்கையில், கொழும்பு கண்டி வீதியில் இடம்பெறும் மாகாணங்களுக்கிடையிலான பஸ் சேவைகள் நிட்டம்புவ வரையில் மாத்திரமே இடம்பெறும். இலக்கம் 05 வீதி ஊடாக செல்லும்.

மாகாணங்களுக்கிடையிலான பஸ்கள் மினுவாங்கொடைவரை மாத்திரமே செல்லும். காலி வீதி ஊடாக செல்லும் பஸ்கள் பாணந்துறைவரையிலும் ஹைலெவல் மற்றும் லோலெவல் வீதிகள் ஊடாக செல்லும் பஸ்கள் அவிசாவளை வரை பயணிக்கும்.

அனுராதபுரம், புத்தளம் மற்றும் குளியாப்பிட்டிய ஆகிய இடங்களில் இருந்து நீர்கொழும்பு வீதியில் கொழும்பு செல்லும் பஸ்கள் நீர்கொழும்பில் நிறுத்தப்படவேண்டும்.

அதிவேக நெடுஞ்சாலையில் பஸ்கள் கொட்டாவ வரையில் மாத்திரமே பயணிக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களுக்கும் தனியார் பஸ்களுக்கும் தேவையான அனைத்து ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன.

சுகாதார பிரிவினரினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கு அமைய, பஸ் சேவைகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பஸ்கள் போதியளவு இல்லா விட்டால், நாம் அவற்றை கொண்டு வருவோம். சேவையில் ஈடுபடாத பஸ்களையும் நாங்கள் சேவையில் ஈடுபடுத்தவுள்ளோம்.

பஸ்களில் ஆசனத்தில் அமர்ந்து செல்வதற்கு அனைத்துப் பயணிகளுக்கும் உரிமை உண்டு. கட்டணத்தை அதிகரிக்க நாம் அனுமதிக்க மாட்டோம்’ என்றும் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, போக்குவரத்து ஆணைக்கு ஆணைக்குழுவில் நேற்று சில தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன.

அவையாவன,

01. ஐந்து வீதிகளின் ஊடாக கொழும்பு நோக்கி பயணிக்கும் பஸ்கள் கொழும்பிற்குள் பிரவேசிக்காது.

02. கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவை நிட்டம்புவ வரை மட்டுப்படுத்தப்படுகின்றது.

03.கொழும்பு – 05 மார்க்கத்தின் ஊடாக பயணிக்கின்ற மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவை, மினுவங்கொடை வரை மட்டுப்படுத்தப்படுகின்றது.

04.காலி வீதியில் பயணிக்கின்ற மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவை, பாணந்துறை வரை மட்டுப்படுத்தப்படுகின்றது.

05.அவிசாவளை ஊடாக புதிய மற்றும் பழைய வீதிகளின் ஊடாக கொழும்பிற்குள் பிரவேசிக்கும் பஸ் சேவை, அவிசாவளை வரை மட்டுப்படுத்தப்படுகின்றது.

06.அநுராதபுரம் – புத்தளம் மற்றும் குளியாப்பிட்டி ஊடாக நீர்கொழும்பு வழியாக கொழும்பிற்குள் பிரவேசிக்கும் பஸ் சேவை நீர்கொழும்பு வரை மட்டுப்படுத்தப்படுகின்றது.

07.தெற்கு அதிவேக வீதியூடாக பயணிக்கும் பஸ் சேவை கொட்டாவை வரை மட்டுப்படுத்தப்படுகின்றது.

08.அதிகாலை 4.30க்கு ஆரம்பிக்கப்படும் பஸ் சேவைகள், மாலை 6 மணிக்கு முதல் நிறுத்தப்பட வேண்டும்.

09.குறித்த பஸ் சேவைகள் நிறுத்தப்படும் இடம் வரையிலான பஸ் கட்டணத்தை மாத்திரமே அறவிட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பஸ்கள் தமது முடிவிடத்தை பஸ்ஸின் முன்பக்க கண்ணாடியில் கட்டாயம் காட்சிப்படுத்த வேண்டும்

என்பதுடன், ஒவ்வொரு பயணி யும் கட்டாயம் முககவசத்தை அணிந்திருத்தல் அத்தியாவசியமானதாகும். பஸ்களுக்காக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரத்தின் காலஎல்லையை ஜூலை மாதம் 30 ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Back to top button