செய்திகள்

மக்களே அவதானம் ! தடுப்பூசி ஒருபோதும் கொரோனா வைரஸை ஒழிக்காது – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமே தவிர நோய் முழுமையாக குணமடையாது.

தடுப்பூசி மூலமான நன்மை 80 வீதம் மாத்திரமே என்பதால் ஆரம்பத்திலிருந்து பின்பற்றிய அடிப்படை சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை மீறி செய்பட முடியாது என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

தற்போது உலகலாவிய ரீதியில் கொவிட் தடுப்பூசிக்கான கேள்வி அதிகரித்துள்ளது.

எனவே இலவசமாக கிடைக்கும் தடுப்பூசிகளுக்கு மேலதிகமாக நாட்டு மக்களுக்கு வழங்குவதற்கான தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் இப்போதிலிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும்.

அவ்வாறில்லையெனில் அடுத்த தொகை தடுப்பூசிகளை பெறுவதற்கு ஓரிரு மாதங்கள் கால தாமதமாகுமாயின் அது பிரயோசனமற்றது.

அத்தோடு அவ்வாறு கொள்வனவு செய்யும் தடுப்பூசிகளும் நம்பிக்கைக்குரியதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும்.

சுகாதாரத்துறையினருக்கு அஸ்ட்ரசெனிகா ஊசிகளை வழங்கிவிட்டு நாட்டு மக்களுக்கு ஏற்றுக்கொள்ளப்படாத தடுப்பூசியை வழங்க முடியாது.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் நூற்றுக்கு 8 சதவீதமானோர் மாத்திரமே தடுப்பூசிகளை ஏற்றிக்போவதில்லை என்று தீர்மானித்துள்ளதாகவும் ஏனைய 92 சதவீதமானோர் தடுப்பூசியை ஏற்றிக் கொள்வதில் ஆர்வமாகவுள்ளதாக தெரியவந்துள்ளது.

54 சதவீதமானோர் கட்டாயமாக தடுப்பூசி ஏற்றிக்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் 30 வீதமானோர் இரு நிலைப்பாடுகளில் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சுகாதாரத்துறை மற்றும் பாதுகாப்புதுறை என அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டாலும் நூற்றுக்கு நூறு வீதம் பாதுகாப்பாக இருக்கின்றோம் என்று யாரும் கருத முடியாது.

தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது என்பதற்காக அடிப்படை சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளிலிருந்து விலக முடியாது என்பதை உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது.

எனவே தடுப்பூசி ஏற்றுவதற்கு முன்னர் பேணிய அடிப்படை சுகாதார பாதுகாப்பு விதிமுகளை பின்பற்ற வேண்டியது அத்தியாவசியமானதாகும்.

தடுப்பூசி வழங்குதல் என்பது சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளிலிருந்து மீள்வதற்கான அனுமதிப்பத்திரமல்ல. தடுப்பூசி ஏற்றிக் கொண்ட பின்னரும் தொற்றுக்கு உள்ளாகக் கூடிய வாய்ப்பு 20 சதவீதம் காணப்படுகிறது.

காரணம் தடுப்பு மருந்தின் மூலம் 80 வீத நன்மையையே பெற்றுக் கொள்ள முடியும். தடுப்பூசியை ஏற்றிக் கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமே தவிர நோய் இல்லாமல் போகாது என்றார்.

Back to top button