செய்திகள்

ஊரடங்கு உத்தரவிற்காக என்னை மன்னித்து விடுங்கள் – பிரதமர் நரேந்திர மோதி

“கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உங்கள் வாழ்க்கையை, முக்கியமாக ஏழைகளின் வாழ்க்கையை கடினமாக்கியதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். உங்களில் சிலர் என் மீது கோபத்தில் இருப்பீர்கள். ஆனால், இந்த யுத்தத்தை வெல்ல சில கடினமான நடவடிக்கைகள் தேவை” என மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசியுள்ளார் பிரதமர் நரேந்திர மோதி.

இந்திய மக்களை பாதுகாப்பதுதான் முக்கியம் என்று மோதி குறிப்பிட்டார்.

யாரும் வேண்டுமென்றே விதிகளை மீறுவதில்லை. ஆனால் விதிகளை மீறும் சிலரும் உள்ளனர். தற்போது விதிகளை அலட்சியப்படுத்தி நம்மை நாம் பாதுகாக்க தவறினால், கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்வது மிகவும் கடினமாகிவிடும் என அவர் மேலும் பேசினார்.

“நம் நாட்டில் பல ராணுவ வீரர்கள் கொரோனா வைரசை எதிர்த்து போராடி வருகின்றனர். நம் சகோதர சகோதரிகள் பலர் செவிலியர்களாகவும் மருத்துவர்களாகவும் நமக்காக பணிபுரிவதைதான் நான் சொல்கிறேன்.”

2020ம் ஆண்டு உலக செவிலியர்களுக்கான சர்வதேச ஆண்டாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் அனைத்து செவிலியர்களுக்கும் தலை வணங்குகிறேன் என்று அவர் கூறினார்.

உடல் ரீதியாக விலகி இருந்தாலும், மனதளவில் இணைந்து இருங்கள் என்றும் பிரதமர் மோதி நாட்டு மக்களுக்கு அறிவுரை வழங்கினார்.

Back to top button