செய்திகள்

இந்தோனீஷியா: வெள்ளத்தில் மூழ்கியுள்ள நகரை காப்பாற்ற மழையை நிறுத்த முயற்சி

கட்டுக்கடங்காத மழையில் சிக்கி வெள்ளக்காடாகக் காட்சியளிக்கும் இந்தோனீஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் மேலதிக மழைப்பொழிவை தடுப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் வித்தியாசமான வழியை முயன்று வருகிறது.

ஜகார்த்தா நகரை நோக்கி வரும் மேகக்கூட்டங்களின் மீது வேதிப்பொருட்களை தூவ செய்து, மழைப்பொழிவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்காக பணியில் இரண்டு விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

வெள்ளத்தில் மூழ்கியுள்ள நகரை காப்பாற்ற மழையை நிறுத்த முயற்சிபடத்தின் காப்புரிமை GETTY IMAGES

புத்தாண்டுக்கு முந்தைய நாளன்று பொழிந்த அதிதீவிர மழையின் காரணமாக ஜகார்த்தா மற்றும் அதனை சுற்றிலுள்ள பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

குறுகிய காலத்தில் கொட்டித் தீர்த்த இந்த மழையில் சிக்கி குறைந்தது 43 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சுமார் இரண்டு லட்சம் மக்கள் தங்களது குடியிருப்பு பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு கூறுகிறது. இந்நிலையில், ஜகார்த்தாவில் மழைப்பொழிவு தொடரும் என்று உள்ளூர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது.

மேலதிக மழைப்பொழிவை விளைவிக்கக் கூடிய மேகங்கள் ஜகார்த்தா நகரை வந்தடைவதற்கு முன்னதாகவே அவற்றில் உப்பு துகள்களை தூவ செய்து மழைப்பொழிவை தடுத்து நிறுத்தும் பணியில் இரண்டு விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் முகமையின் செய்தி தெரிவிக்கிறது.

வெள்ளத்தில் மூழ்கியுள்ள நகரை காப்பாற்ற மழையை நிறுத்த முயற்சிபடத்தின் காப்புரிமை GETTY IMAGES

“கிரேட்டர் ஜகார்த்தா பகுதியை நோக்கி நகரும் அனைத்து மேகங்களும், அங்கு மழைப்பொழிவுக்கு வழிவகுக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், அவற்றின் மீது சோடியம் குளோரைடு தெளிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று இந்தோனீஷியாவின் தொழில்நுட்ப நிறுவனமான பிபிபிடி வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளந்தில் சிக்கித் தவிக்கும் குடும்பங்களை மீட்பதற்காக ரப்பர் படகுகளைப் பயன்படுத்துவதாக இந்தோனீஷிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இதுவரை 12க்கும் அதிகமான மக்களை காணவில்லை.

தாழ்ந்த பகுதிகளிலும், ரயில் தண்டவாளங்களிலும் நிறைந்துள்ள தண்ணீரை மோட்டார் கொண்டு வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சில பகுதிகளில் வெள்ள நீர் வடிந்தாலும், அவை விட்டு சென்ற குப்பைகள் மற்றும் சேற்றால் மக்கள் தங்களது வீடுகளுக்கு மீண்டும் செல்ல முடியாத நிலை நிலவுகிறது.

வெள்ளத்தில் மூழ்கியுள்ள நகரை காப்பாற்ற மழையை நிறுத்த முயற்சிபடத்தின் காப்புரிமை GETTY IMAGES

தீவிர மழைப்பொழிவு உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் சமீப காலமாக ஜகார்த்தாவில் இயல்பான ஒன்றாக மாறி வருவதால், அந்நாட்டின் அதிபர் ஜோகோ விடோடோ அடுத்த சில ஆண்டுகளில் தலைநகரை கிழக்கு போர்னியோவுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளார்.

வெள்ளத்தடுப்பு கட்டமைப்புகளை பலப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதமே தற்போது உருவாகியுள்ள மோசமான சூழ்நிலைக்கு காரணம் என்று விடோடோ குற்றஞ்சாட்டினார்.

கடந்த 2013ஆம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்டுள்ள மிக மோசமான வெள்ள பாதிப்பாக இது பார்க்கப்படுகிறது.

லட்சக்கணக்கான மக்கள் வாழ்ந்து வரும் ஜகார்த்தா நகரம், உலகிலேயே மிகவும் வேகமாக மூழ்கி வரும் நகரங்களில் ஒன்று என்றும், அது 2050ஆம் ஆண்டுக்குள் முற்றிலும் கடலுக்குள் மூழ்கிவிடும் என்றும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Back to top button