செய்திகள்

நான்கு கட்டங்களாக மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள பாடசாலைகள்..! (காணொளி)

கொவிட்-19 காரணமாக கடந்த மார்ச் மாதம் 13 ஆம் திகதி மூடப்பட்ட பாடசாலைகளை நான்கு கட்டங்களாக திறப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கொழும்பில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும இந்த அறிவித்தலை வெளியிட்டார்.
இதன்படி, ஜுன் மாதம் 29 ஆம் திகதி பாடசாலைகள் முதற்கட்டமாக திறக்கப்படவுள்ளன.
குறித்த தினத்தில், அதிபர்கள், ஆசிரியர்கள், உள்ளிட்ட குழாமினர் பாடசாலைக்கு அழைக்கப்பட்டு, பாடசாலைகளில் கிருமி தொற்று நீக்கம், மீள் திட்டமிடல், பெற்றோர் சங்கங்களுடன் கலந்துரையாடல் என்பன இடம்பெறவுள்ளது.
இரண்டாம் கட்டமாக ஜுலை மாதம் 6 ஆம் திகதி முதல் 17 வரை தரம் ஐந்து, 11, 13 ஆகிய தரங்களுக்காக பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன.
மூன்றாம் கட்டமாக ஜுலை 20 முதல் 24 வரை 10 மற்றும் 12 தர மாணவர்களுக்காக பாடசாலைகள் திறக்கப்பவுள்ளன.
நான்காம் கட்டமாக ஜுலை 27 முதல் 3, 4, 6, 7, 8, 9 ஆகிய தரங்களுக்காக பாடசாலைகள் திறக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
முதலாம் மற்றும் இரண்டாம் தர மாணவர்களுக்காக பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை
இதேவேளை, கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சையை செப்டம்பர் மாதம் 7 ஆம்; திகதி முதல் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதிவரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதி நடத்தப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் 10,11,12,13 ஆகிய தரங்களுக்கு காலை 7.30 முதல் பிற்பகல் 3.30 வரை பாடசாலைகள் இடம்பெறும் என்பதோடு  3 ஆம் மற்றும் 4 ஆம் தரங்களுக்கு மு.ப 11.30 வரையும் 5 ஆம் தரத்திற்கு நண்பகல் 12 மணிவரையிலும் வகுப்புக்கள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Back to top button