செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளிநாட்டு ஊழியர்களுக்கு க்ரீன் கார்ட் மற்றும் எச் -1 பி (H1B) , எச் -2 பி (H2B) உள்ளிட்ட விசா வழங்குவதற்கான தடையை இந்த ஆண்டு இறுதி வரை நீடித்துள்ளார் .

ஏற்கெனவே விசா வைத்திருப்பவர்கள் இந்த நடவடிக்கையால் எந்த பாதிப்புக்கும் உள்ளாகமாட்டார்கள்.

இதன் காரணமாக தொழில்நுட்ப பணியாளர்கள், விவசாயம் சாராத பணியாளர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்படுவார்கள்.

இக்கட்டான உலகத் தொற்று சூழலில் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையானது அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உதவும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் உலகத் தொற்றை காரணமாக வைத்து குடிவரவு சட்டங்களை அமெரிக்கா கடுமையாக்குவதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏப்ரல் மாதமே இந்த தடையை அறிவித்தது வெள்ளை மாளிகை. திங்கட்கிழமையுடன் தடை முடியும் சூழலில், இப்போது இந்த தடையை நீடித்துள்ளது அமெரிக்கா.

அவ்வப்போது தேவைக்கு மட்டும் அழைத்துக் கொள்ளப்படும் பணியாளர்கள் அதாவது உணவு பதப்படுத்துதல், சுகாதாரத் துறையை சேர்ந்த பணியாளர்களுக்கு வழங்கப்படும் எச் -2 பி விசாவும் ரத்து செய்யப்படுகிறது.

அது போல பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் ஜெ-1 (J1) விசா ரத்து செய்யப்படுகிறது. அதே சமயம் சில விதிவிலக்குகளும் இதில் உண்டு.

பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றும் முக்கிய ஊழியர்கள் மற்றும் மேலாளர்களுக்கு வழங்கப்படும் எல் (L) விசாவும் ரத்து செய்யப்படுகிறது.

அமெரிக்கா எடுத்துள்ள இந்த நடவடிக்கையானது 5,25,000 மக்கள் மீது தாக்கம் செலுத்தும்.

Back to top button