செய்திகள்

வடக்கில் முக்கிய தமிழ் அரசியல்வாதியை கொலை செய்ய சதி – ஆறு பேர் கைது – இலங்கையின் பாதுகாப்பு வட்டாரங்கள்தகவல்

வடக்கில் முக்கிய தமிழ் அரசியல்வாதியொருவரை கொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சதி முயற்சிகள் தெரியவந்துள்ளதை தொடர்ந்து வடக்குகிழக்கில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக டெய்லி மிரர்  செய்திவெளியிட்டுள்ளது.

முக்கிய தமிழ் அரசியல்வாதியை கொலை செய்வதற்கு திட்டமிட்ட ஆறு முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க  போராளிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.

வடபகுதியில் பயங்கரவாத விசாரணை பிரிவினரும் இராணுவ புலனாய்வு பிரிவினரும் இணைந்து வீடொன்றை முற்றுகையிட்டு சோதனையிட்டவேளை நவீன தொலைத்தொடர்பு கருவிகளையும் வெடிபொருட்களையும் மீட்டுள்ளனர் எனவும்  டெய்லி மிரர் தெரிவித்துள்ளது

முதலில் ஜேர்மனியின் கடவுச்சீட்டை வைத்திருந்த முன்னாள் போராளியொருவர் கைதுசெய்யப்பட்டார் அதன் பின்னர்  மறைவிடமொன்றில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது ஏனையவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.

மேற்குலக நாடுகளிலும் தென்கிழக்காசிய நாடுகளிலும் உள்ள விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் இந்த குழுவினரிற்கு நிதிஉதவி வழங்கியுள்ளனர் என்பது விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்களில் மூவர் விசேட பயிற்சிகளை பெற்றுள்ளனர் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியா மற்றும் மலேசியாவில் உள்ள விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் நிதி மற்றும் ஏனைய ஆதரவை வழங்கியுள்ளனர் என இலங்கை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விபரங்களை பெறுவதற்காக சர்வதேச அமைப்புகளின் உதவி நாடப்பட்டுள்ளதாக  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Sources : virakesari.lk

Back to top button