செய்திகள்

முழுநேர போக்குவரத்து கட்டுப்பாடுகள் குறித்து பிரதி பொலிஸ்மா அதிபரின் முக்கிய அறிவிப்பு -Sri Lanka Curfew Areas

முழு நேர போக்குவரத்து கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக 20 ஆயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து கட்டுபாட்டு சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்படும் நபர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் மற்றும் குற்றவியல் சட்டவிதிகளுக்கமைய சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

போக்குவரத்து கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு புறம்பாக செயற்படும் நபர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் சட்டநடவடிக்கை எடுப்பதுடன், அவர்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும்.

போக்குவரத்துக்கள்

இக்காலப்பகுதியில் பஸ், புகையிரதம் உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவை இயங்காது. ஏனைய வாகனங்களுக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது.

எனினும் வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக செல்பவர்கள் , வாடகை வாகனங்களில் அல்லது சொந்த வாகனங்களில் செல்லமுடியும். ஆனால், அது தொடர்பில் உறுதிப்படுத்த வேண்டும்.

மருந்தகங்கள் திறந்து வைக்கப்பட்டிருப்பதால் , மருந்துகளை பெற்றுக்கொள்பவர்கள் தங்களது வீட்டின் அருகில் இருக்கும் மருந்தகத்திற்கு மாத்திரம் செல்ல அனுமதி வழங்கப்படும்.

இதன்போது மோட்டார்சைக்கிள், முச்சக்கரவண்டி உள்ளிட்ட எந்த வாகனங்களில் செல்லவும் அனுமதி வழங்கப்படமாட்டாது.

வெளிநாடுகளுக்குச் செலர்பவர்கள் விமான நிலையத்துக்கு செல்லும் போது பயணச்சீட்டை வைத்திருக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அதனை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரத்தை வைத்திருக்க வேண்டும். இத்தகைய நபர்களை அழைத்துச் செல்லும் சாரதிகளும் அது தொடர்பில் உறுதிப்படுத்துவதற்கான ஆதாரமொன்றை அருகில் வைத்திருக்க வேண்டும்.

தொழிலுக்குச் செல்ல அனுமதிப் பெறுபவர்கள்

சுகாதாரம் , நீர் , மின்சாரம் , தொடர்பாடல் , ஊடகம் , துறைமுகம் , விமான நிலையம், தனியார் பாதுகாப்பு துறை உள்ளிட்ட பிரிவுகளில் பணிபுரிபவர்கள் தங்களது தொழில் அடையாள அட்டைக்கு மேலதிகமாக , தங்களது சேவை அவசியம் என்பதை உறுதிப்படுத்துவதற்கான தொழில் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட ஆவணக்கடிதத்தையும் வைத்திருக்க வேண்டும். அவ்வாறான உறுதிப்பத்திரம் இல்லாவிட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

முதலீட்டு சபை மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி சபைக்கு சொந்தமான நிறுவனங்கள் செயற்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் போக்குவரத்து செயற்பாடுகளுக்கான வசதிகளை செய்து கொடுத்திருக்க வேண்டும். இதன்போது ஒவ்வொரு ஊழியர்களும் தனித்தனியாக வருவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.

மனிங் சந்தை, பேலியகொடை மீன் சந்தை பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்பட்டிருக்கும். அவற்றில் தொகை விற்பனை மாத்திரமே இடம்பெறும். இதன்போது சில்லறை விற்பனை நடவடிக்கைகள் இடம்பெறமாட்டாது. எனினும் வேறு பிரதேசங்களிலிருந்து உற்பத்தி பொருட்களை எடுத்து வருவதற்கு அனுமதியுள்ளது.

இதேபோன்று தொகை அடிப்படையில் பெற்றுக் கொள்ளும் பொருட்களை வேறு பிரதேசங்களுக்கு எடுத்துச் சென்று விநியோகிப்பதற்கு அனுமதியுள்ளது. அதற்காக வியாபாரிகள் தங்களது சொந்த வாகனத்தையே பயன்படுத்த வேண்டும். வீதி புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் தொழிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொருள் விநியோக நடவடிக்கைகள்

உலர் உணவுப் பொருட்கள் மற்றும் துரித உணவுப் பொருட்கள் விநியோக நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறான விநியோக சேவையில் ஈடுபடும் நிறுவனங்கள் அல்லது வர்த்தக நிலையங்கள் , தங்களது விநியோகஸ்தர்களின் விபரம் மற்றும் அவர்கள் விநியோக நடவடிக்கையில் ஈடுபடும் போது பயன்படுத்தும் வாகன இலக்கங்கள் தொடர்பான தகவல்களை அருகில் இருக்கும் பொலிஸ் நிலையத்தின் , பொறுப்பதிகாரிக்கு தெரிவித்து அனுமதி பெற வேண்டும்.  

திருமணங்களை நடத்துவதற்காக , சுப நேரங்கள் காணப்படுவதாக சிலர் தொலைபேசி ஊடாக தெரிவித்து வருகின்றனர். அத்தகைய நபர்கள் சுகாதார தரப்பினருக்கு அறிவித்து அனுமதியைப் பெற்றுக் கொண்டு ,  திருமண பதிவாளர் திருமண தம்பதியினர் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் என மட்டுப்படுத்தப்பட்ட 15 பேருடன் , சுகாதார சட்டவிதிகளுக்கமைய அதனை நடத்தமுடியும்.

Back to top button