இத்தாலியிலிருந்து இலங்கை வந்த அனைவரையும் அடையாளம் காண நடவடிக்கை!
மார்ச் முதலாம் திகதி முதல் ஒன்பதாம் திகதி வரை இத்தாலியிலிருந்து இலங்கைக்கு வந்த அனைத்து நபர்களையும் அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இவ்வாறு அடையாளம் காணும் நபர்களில் கொரோனா தொற்று போன்ற அறிகுறிகள் உள்ளோரை தனிமைப்படுத்தி விசேட வைத்திய பரிசோதனைக்குட்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக காதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
இன்று காலை இடம்பெற்ற சிறப்பு கலந்துரையாடல் ஒன்றின்போதே அவர் இதனைக் கூறினார்.
இதேவேளை கடந்த இரண்டு வாரங்களில் இத்தாலியிலிருந்து இலங்கை வந்தோர் சுயமாக தம்மை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை பொலிஸ் துறை மற்றும் சுகாதார சேவைகளின் ஆதரவுடன் தனிமைப்படுத்தல் பணிகள் மேற்கொள்ளப்படும்.
இதுவரை நாட்டில் நாட்டிற்குள் பதிவான கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 10 ஆகும். இதில் இத்தாலியிலிருந்து வந்த 56 வயது பெண்ணும், 17 வயதுடைய இளைஞரும் அடங்குவர்.
மீதமுள்ள நோயாளிகள் வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வந்துள்ளனர் அல்லது வெளிநாட்டினருடன் தொடர்புடையவர்கள் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜசிங்க இதன்போது கூறினார்.