செய்திகள்

லீசிங் நிறுவனங்களின் முறைப்பாட்டை பொறுப்பேற்க வேண்டாம் : ஜனாதிபதி பொலிஸாருக்கு உத்தரவு

தவணை முறையில் வாகனங்களை கொள்வனவு செய்தவர்களுக்கு கடன் தவணை செலுத்துவதற்காக வழங்கப்பட்ட நிவாரணம் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பது குறித்து அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பொருளாதார செயற்பாடுகள் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

அதனால் பாதிக்கப்பட்ட குழுக்களுக்கு அரசாங்கம் பல நிவாரணங்களை வழங்கியது. ஜனாதிபதியின் செயலாளரின் கையொப்பத்துடன் கடந்த மார்ச் 23ஆம் திகதி வெளியிடப்பட்ட PS/CSA/18/2020  ஆம் இலக்க சுற்றுநிருபத்தின் இரண்டாம் பிரிவில் முச்சக்கரவண்டி உரிமையாளர்களினால் செலுத்தப்பட வேண்டிய லீசிங் கடன் தவணையை அறவிடுவதை ஆறு மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டது.

ஜனாதிபதியின் செயலாளரின் கையொப்பத்துடன் மார்ச 30ஆம் திகதி நிதியமைச்சு மற்றும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர்களுக்கு அனுப்பப்பட்ட PS/CSA/18/2020 ஆம் இலக்க சுற்றுநிருபத்தின் 09வது பந்தியில் முச்சக்கர வண்டிகள், ட்ரக் வண்டிகள், பாடசாலை பஸ் வண்டிகள் மற்றும் வேன்கள், சுயதொழிலுக்காக பயன்படுத்தப்படும் கார்கள் போன்ற சுயதொழில்களில் ஈடுபடும் பதினைந்து லட்சம் வாகனங்களுக்கு தவணை நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டது.

இவ்வாறான நிவாரணம் வழங்கப்பட்டுள்ள நிலையில் சில லீசிங் நிறுவனங்களும் நிதி நிறுவனங்களும் கடன் தவனை செலுத்தத் தவறுபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்வது அரசாங்கத்தின் உத்தரவை மீறும் செயலாகும் என்றும் அது சட்டவிரோத நடவடிக்கை என்பதால் அதனை முற்றாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்தார்.

கடன் தவணை செலுத்தாமை பற்றி லீசிங் நிறுவனங்களில் இருந்து கிடைக்கப்பெறும் எந்தவொரு முறைப்பாட்டையும் ஆறு மாத நிவாரண காலப்பகுதி நிறைவுபெறும் வரை பொறுப்பேற்க வேண்டாம் என்றும் ஜனாதிபதி பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்னவுக்கு பணிப்புரை விடுத்தார்.

மேலும் வாகனங்களை பறிமுதல் செய்ததன் பின்னர் முறையிடுவதும் சட்ட விரோதமானது என்பதால் அத்தகைய முறைப்பாடுகளை பொறுப்பேற்க வேண்டாம் என ஜனாதிபதி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Back to top button