விளையாட்டு

மகேந்திர சிங் தோனி: இந்திய கிரிக்கெட்டை உச்சங்களுக்கு எடுத்து சென்ற தலைவனின் கதை History of mahendra singh dhoni in tamil

“தலைவன் பிறப்பதில்லை, காலமும் சூழலும் சிந்தனைகளுமே தலைவர்களை உருவாக்குகின்றன” என்ற தொடர் இன்று பிறந்த நாள் காணும் மகேந்திர சிங் தோனிக்குப் பொருந்தும்.

தலைவர்களுக்கே உரிய தெளிவால் சாமானிய இந்தியர்களுக்கு சபலத்தை ஏற்படுத்தவல்ல மத்திய அரசுப் பணியை உதறிவிட்டு பேட்டை தூக்கிக் கொண்டு மைதானத்துக்கு ஓடினார். அந்த நொடியில் உருவாகத் தொடங்கினான் இந்திய கிரிக்கெட்டின் இரணியன்.

வரலாறு எல்லா மனிதர்களையும் ஒரு வரியில் நினைவு கொள்ளும், சிலருக்கு பக்கங்களை வழங்கும், வெகு சிலருக்கு மட்டுமே அத்தியாயங்களை ஒதுக்கும். கிரிக்கெட் வரலாறு, தோனிக்கு அத்தியாயம் ஒதுக்கித் தந்தது. கிரிக்கெட் வரலாறு எம்.எஸ். தோனிக்கு முன் – பின் என்றானது.

மகேந்திர சிங் தோனி
history of mahendra singh dhoni in tamil

2004 வங்கதேசத்துடனான போட்டியில் இந்திய அணி சார்பில் களமிறக்கப்பட்டார் தோனி. வங்கதேசத்துக்கு எதிராக, தாகாவில் 2004 டிசம்பர் 27 அன்று நடந்த மூன்றாவது ஒரு நாள் போட்டியில் மூன்று கேட்ச், இரண்டு ஸ்டம்பிங் என ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி ஒரு நல்ல விக்கெட் கீப்பராக இந்திய அணியில் தன் இடத்தை உறுதி செய்தார்.

விசாகப்பட்டினத்தில் 2005 ஏப்ரல் 5ஆம் தேதி நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில், தோனிக்கு ஒன் டவுன் இறங்கும் வாய்ப்பை கொடுத்தார் கங்குலி.

முதல் சில ஓவர்களிலேயே சச்சின் ஆட்டமிழக்க, அதிரடி நாயகன் சேவாக்குடன் கை கோர்த்தார் தோனி. பவுண்டரிகளும் சிக்சர்களும் தெறித்தன. 148 ரன் எடுத்து பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமானார்.

மகேந்திர சிங் தோனி

2005 அக்டோபர் 31ஆம் தேதி, ஜெய்பூரில் நடந்த இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் 299 ரன் எடுத்தால் வெற்றி என்கிற இமாலய இலக்கு.

வழக்கம் போல இந்தியா சச்சின், சேவாக்கை நம்பி இருந்தது. எதிரணியில் சமிந்தா வாஸ், முத்தையா முரளிதரன் போன்ற அபாயகரமான பந்துவீச்சாளர்கள் இருந்தனர்.

சச்சின் விக்கெட் வீழ்ந்தது. தோனி களமிறங்கி வாஸ் & முரளிதரன் பந்துகளை துவம்சம் செய்தார். 145 பந்துகளுக்கு 183 ரன்களைக் குவித்ததார்.

இன்று வரை இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குவித்த அதிகபட்ச சர்வதேச ஒரு நாள் ரன்கள் என்கிற சாதனையைப் படைத்தார் தோனி.

1990-களின் கடைசி காலத்தில் அசாருதீனுக்குப் பிறகு, இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்த ஒரு சரியான நபர் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்தபோது அமரேந்திர பாகுபலியாய் கிடைத்தார் கங்குலி.

மகேந்திர சிங் தோனி
history of mahendra singh dhoni in tamil

2005 – 06 காலகட்டத்தில் கங்குலி இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் பதவியில் இருந்து விலகிய பிறகு, மீண்டும் அதே போன்ற சூழல் நிலவியது. அனுபவமிக்க ராகுல் டிராவிட், சேவாக், அனில் கும்ப்ளே என பலரும் அணித் தலைவராக பணியாற்றினர், சரிப்பட்டு வரவில்லை.

160 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்படும் இன் சுவிங், ஸ்டம்புகளை தெறிக்கவிடும் யார்கர், 15 டிகிரி சுழன்று பேட்ஸ்மேனை தடுமாறு வைக்கும் ஸ்பின்களை எல்லாம் எதிர்கொண்ட சச்சினே, ‘இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர்’ என்கிற பந்தில் போல்டானார் என்று தான் வரலாறு நினைவுகூர்கிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் என்பது… பணம், பல்லாயிரம் கோடி ரூபாய் வணிகம், பல அரசியல் அடுக்குகள், உணர்ச்சிப் பிழம்பான 120 கோடி ரசிகர்கள், தன் ஆட்டம், அணியின் செயல்பாடு, அணிக்கான வீரர்கள் தேர்வு, அணியின் எதிர்காலம் என பல பொறுப்புகளை உள்ளடக்கிய இமய கணம் கொண்ட பணி அது. அப்பதவி பலரை ஈவு இரக்கமின்றி நசுக்கி இருக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பொறுப்பு என்கிற கூர்மையான இருமுனை போர்வாள், எப்போது யாரை வெட்டும் என எவராலும் கணிக்க முடியாது.

ராஞ்சி வீரனுக்கு, அந்த சிக்கலான தலைமை பொறுப்பு மிக நெருக்கடியான காலத்தில் தேடி வந்தது. தோனி நினைத்திருந்தால் தன்னளவில் ஒரு சிறந்த விக்கெட் கீப்பராகவும் பேட்ஸ்மேனாகவும் இன்னும் பல புதிய உச்சங்களைத் தொட்டிருக்கலாம். மாறாக பசிபிக் பெருங்கடலில் மூழ்கி முத்தெடுக்க தீர்மானித்தார் தோனி.

இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் என்கிற போர்வாளை கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேல் பிரமாதமாக சுழற்றி பல போட்டிகளில், முக்கிய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த பெருமை தோனியையே சேரும்.

மகேந்திர சிங் தோனி
history of mahendra singh dhoni in tamil

தோனி தன் தனி மனித சாதனைகளையும், கேப்டனாக அவர் அடைந்த உயரங்களையும் ஒரே காலகட்டத்தில் செய்தார்.

தோனி எனும் சகாப்தத்தை, காலம் பொன்னெழுத்துக்களால் வடிக்கத் தொடங்கிய ஆண்டு 2007.

ஐசிசி உலக டி20 சாம்பியன்ஸ் போட்டியில் சச்சின், கங்குலி, டிராவிட் போன்ற இந்திய கிரிக்கெட்டின் முகங்கள் எதும் இல்லை. அணிக்கு தலைமை தாங்க தோனியைப் பரிந்துரைத்தார் சச்சின். பல்வேறு விமர்சனங்களுக்குப் பிறகு ஏதோ பெயரளவில் சுமாரான அணி போட்டிக்குச் செல்கிறது என பலரும் கருதினர்.

பாகிஸ்தானுடன் இறுதிப் போட்டி. இதில் மற்றுமொரு ஆச்சர்யம் என்னவென்றால், தோனி, சேவாக்கை இறுதிப் போட்டியில் களமிறக்கவில்லை. ரசிகர்கள் மேலும் குழம்பிப் போயினர்.

டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. “இந்தியாவை 150 – 160 ரன்களுக்குள் சுருட்டி விடுவோம்” என பாகிஸ்தானின் கேப்டன் ஷோயப் மாலிக் ஆரூடம் கூறி இருந்தார். அது அப்பட்டமாக பலித்திருந்தது. இந்தியாவை 157 ரன்களுக்குள் சுருட்டி இருந்தது பாகிஸ்தான்.

இப்போட்டியில் இந்தியா பேட்டிங் செய்த போது யுவராஜ் & கெளதம் கம்பீர் இணை சேர்ந்து 47 பந்துகளில் 63 ரன்களைக் குவித்தது. அப்படி ஒரு வலுவான இணை அமைந்துவிடாமல் பார்த்துக் கொண்டார் தோனி.

மிஸ்பா உல் ஹக் இந்திய பந்து வீச்சாளர்களின் தாக்குதலை எதிர்கொண்டு சிறப்பாக ஆடி வந்தார். அவரை வீழ்த்தினால் ஒழிய போட்டி இந்தியாவுக்கு சாதகமாகாது என்பதை உணர்ந்தார் தோனி.

மகேந்திர சிங் தோனி
history of mahendra singh dhoni in tamil

19 ஓவர் முடிவில் பாகிஸ்தான் 145 ரன்களுக்கு 9 விக்கெட்டை இழந்திருந்தது. கடைசி ஓவரை அனுபவமிக்க ஹர்பஜன் வீசுவார் என எதிர்பார்த்தனர். அது தான் அப்போது உலக நியதியும் கூட. ஆனால் ஜோகிந்தர் ஷர்மாவை அழைத்து வீசச் சொல்லி ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் தோனி.

முதல் பந்தே வைட், இரண்டாம் பந்து டாட், மூன்றாம் பந்தில் சிக்ஸர் இந்திய ரசிகர்களின் இதயத் துடிப்பு சதமடித்தது.

ஜோகிந்தருக்கு சில அறிவுரைகள்… ஃபீல்டிங்கில் சில சிறிய மாற்றங்கள் செய்தார் தோனி. நான்காம் பந்தில் மிஸ்பா உல் ஹக் ஸ்கூப் ஷாட் ஆட, அது ஸ்ரீசாந்த் கையில் சிறைபட்டது.

விக்கெட் வீழ்ந்தது. இந்தியா வென்றது.

ஏன் ஹர்பஜனுக்கு இறுதி ஓவர் வீச வாய்ப்பு கொடுக்கவில்லை எனக் கேட்டதற்கு “அவர் மனதளவில் குழப்பமாக இருந்தார். அவருக்கு பதிலாக கிரிக்கெட்டில் சாதிக்க விரும்பும், துடிப்பான ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்க விரும்பினேன். ஜோகி சிறப்பாக செயல்பட்டார்” என பதில் கொடுத்து நகர்ந்தார் தோனி.

மகேந்திர சிங் தோனி வையத் தலைமை கொண்ட தருணமது.

மகேந்திர சிங் தோனி
history of mahendra singh dhoni in tamil

தோனி கேப்டனாகப் பதவியேற்று விளையாடிய முதல் 11 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா ஒன்றில் கூட தோற்கவில்லை. 2009 மார்ச் ஏப்ரல் மாத காலத்தில் தோனியின் நீலப் படை நியூசிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரை வென்றது.

2013ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது, நான்கு டெஸ்டில் வென்று ஆஸ்திரேலியாவை முற்றிலும் மூழ்க வைத்தது இந்தியா.

கிரிக்கெட் சாம்பியன்களான ஆஸ்திரேலியாவை அவர்கள் மைதானத்திலேயே வீழ்த்திய பெருமையும் தோனிக்கு உண்டு.

ரிக்கி பான்டிங், கில் கிரிஸ்ட், பிரெட் லி, மிட்சல் ஜான்சன், மேத்யூ ஹைடன் போன்ற உலக கிரிக்கெட்டின் ஜாம்பவான்கள் ஆஸ்திரேலிய அணியில் விளையாடிக் கொண்டிருக்கும் போதே, தோனி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் தன் வெற்றிக் கொடியை நாட்டியது.

2008 சிபி தொடரின் முதல் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா 240 ரன்களை இலக்காக வைத்தது. 4 விக்கெட் இழந்து 45.5 ஓவரிலேயே வெறும் 242 ரன்களைக் குவித்து ஆஸ்திரேலியாவை அலறவிட்டது தோனியின் இந்திய அணி.

2008 மார்ச் 8ஆம் தேதி அதே தொடரின் இரண்டாவது இறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 258 ரன்களைக் குவித்தது. ஆஸ்திரேலியாவை 49.4 ஓவரில் 249 ரன்களில் 10 விக்கேட்டுகளையும் வீழ்த்தி வெற்றிக் கொடி நாட்டியது இந்தியா.

history of mahendra singh dhoni in tamil

ஆஸ்திரேலியாவை வெல்வதே கடினம், அதிலும் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெல்வது, நான்கு ஓவர்களுக்கு முன்பே ஆஸ்திரேலியா வைத்த இலக்குகளை அடித்து நொறுக்குவது எல்லாம் அதுவரை இந்திய ரசிகர்கள் காணாத ஒன்று.

உள்ளூர் ரசிகர்களைத் தாண்டி, உலக கிரிக்கெட் ரசிகர்களையும் ஈர்த்தது தோனி காந்தம்.

இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம் என பல நாடுகளிலும் தொடரை வென்றது தோனி படை.

என்ன தான் தோனியின் வெற்றிகள் ரசிகர்களை கிறங்கடித்தாலும், கிரிக்கெட் உலகப் போர் என வருணிக்கத்தக்க, உலகக் கோப்பை மட்டும் பல பத்தாண்டுகளாக இந்தியாவால் வெல்லப்படாமல் இருந்தது.

1983ஆம் ஆண்டு கபில் தேவ் தலைமைமையில் அக்கோப்பையை வென்ற இந்தியாவுக்கு அதன் பிறகு அது கனவாகவே இருந்து வந்தது.

உலகக் கோப்பை உடன் தோனி

2011 உலகக் கோப்பை போட்டிகள் தொடங்கின.தோனி சரியாக விளையாடவில்லை என விமர்சனம் அனல் பறந்தது. ஒருவழியாக இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. முதலில் பேட் செய்த இலங்கை 275 ரன்களை வெற்றி இலக்காக வைத்தது.

மலிங்கா வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே எல் பி டபிள்யூ ஆனார் சேவாக். இந்திய ரசிகர்களின் கண்கள் இருண்டு விட்டன.

சரி எப்படியும் சச்சின் உட்பட மற்ற பேட்ஸ்மேன்கள் பார்த்துக் கொள்வார்கள் என இந்திய ரசிகர்கள் கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். மறு முனையில் கெளதம் கம்பீர் களமிறங்கி நிதானம் காட்டினார். அதற்குள் மலிங்கா மற்றொரு பேரிடியை இந்திய ரசிகர்கள் தலையில் இறக்கினார்.

மலிங்கா வீசிய 7-வது ஓவரின் முதல் பந்தில் சச்சின் அவுட் சைட் எட்ஜ் ஆகி வீழ்த்தப்பட்டார். வான்கடே மைதானம் சோகத்தில் மூழ்கியது.

‘லசித் மலிங்கா இஸ் அன்ஸ்டாப்பபிள்’ என வர்ணனையாளர் கூறினார். 6.1 ஓவரில் 31 ரன்களுக்கு இரு விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலையில் இருந்தது இந்தியா.

22-வது ஓவரில் தில்ஷான் வீசிய நான்காவது பந்தில், கோலி அடித்த பந்து தில்ஷானிடமே சரணடைந்தது. 114-க்கு 3 விக்கெட் இழந்தது இந்தியா. கோலி 35 ரன்களோடு பெவிலியன் திரும்பினார்.

மகேந்திர சிங் தோனி
படக்குறிப்பு,இந்திய கிரிக்கெட் வரலாற்றின் ஆட்ட நாயகன்.

இக்கட்டான, பல ட்ரில்லியன் டன் அழுத்தம் நிறைந்த நேரத்தில் மகேந்திர சிங் தோனி களமிறங்கினார். ஆட்டத்தை மில்லிமீட்டர் மில்லி மீட்டராக இந்தியாவின் பக்கம் திருப்பினார்.

குலசேகரா வீசிய 49ஆவது ஓவரின் இரண்டாவது பந்தில் தோனி அடித்த அந்த ஹெலிகாப்டர் ஷாட் சிக்சரில், இந்தியாவின் 28 ஆண்டுகால உலகக் கோப்பை தாகத்துக்கு நீர் வார்த்தார் தோனி.

2011 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு, மீண்டும் ஒரு புதிய அணியை உருவாக்கத் தொடங்கினார். அணிக்கு முழுமையாக செயல்பட முடியாத சீனியர்கள் சிலரை 2007-ல் எப்படி வழி அனுப்பி வைத்தாரோ, அதே போல 2011-க்குப் பிறகும் சில ஜாம்பவான்களை வீட்டுக்கு அனுப்பினார் அல்லது அவர்களே கெளரவமாக ஓய்வு பெற்றனர். 2011-க்குப் பிறகு பல தோல்விகளை சந்தித்த போது தோனி எதிர்கொண்ட விமர்சனங்கள்… அப்பப்பா.

அப்போதும் தோனி புதிய அணியை கட்டமைப்பதிலும், புதியவர்களுக்கு போதிய அனுபவம் மற்றும் வாய்ப்பு வழங்கவேண்டும் என்பதிலும் கறாராக இருந்தார். பலன் 2013-ல் சாம்பியன்ஸ் டிராஃபியை வென்றது இந்தியா.

மூன்று ஐசிசி கோப்பை, ஆசிய கோப்பை, காமன்வெல்த் பேங்க் முத்தரப்புத் தொடர், கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் தரவரிசையில் இந்தியாவுக்கு `நம்பர் 1′ இடம் கிடைத்தது.

“முற்றுப்புள்ளி வரும் வரை வாக்கியம் முடிவதில்லை” என்பது தோனியின் கூற்று. அதன் படி ஆட்டம் முடியும் வரை போராடும் குணத்தை இந்திய அணிக்கும், அதை ரசிக்கும் மனப்பாங்கை இந்திய ரசிகர்களுக்கு தன் செயல்வழி கற்றுக்கொடுத்தவர் தோனி.

சங்கீதத்தை முறையாக படிக்காத யுவன் சங்கர் ராஜா எப்படி மங்காத்தாவில் மிரட்டினாரோ, அப்படி சிறு வயதில் கிரிக்கெட் அகாடமிக்கு எல்லாம் செல்லாத தோனியின் அதிரடி ஆட்டங்கள், உள்ளுணர்வால் அவர் எடுத்த முடிவுகள், களத்தில் திடீரென மாற்றிய வியூகங்கள், இந்திய அணியை பல முறை கோப்பையை முத்தமிட வைத்தன.

மகேந்திர சிங் தோனி
படக்குறிப்பு,மறக்க முடியாத ஹெலிகாப்டர் ஷாட்களுக்கு சொந்தக்காரர்.

2013 ஐசிசி சாம்பியன்ஷிப் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இஷாந்த் ஷர்மாவை 18வது ஓவர் வீச வைத்தது, 2016 ஐசிசி உலக டி20 சாம்பியன்ஷிப் தொடரில் ஒரு ரன்னில் வங்கதேசத்தை வென்றது, 2013ஆம் ஆண்டின் சாம்பியன் டிராஃபியில் ரோஹித் ஷர்மாவை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கியது என தோனி தம் உள்ளுணர்வால் எடுத்த முடிவுகளைப் பட்டியலிடலாம்.

கவர் டிரைவ், ஸ்கொயர் கட், ஸ்ட்ரெயிட் டிரைவ், ஃபுல் ஷாட், ஸ்கூப் ஷாட் போன்ற நிறுவப்பட்ட கிரிக்கெட் உத்திகளை எல்லாம் அவர் அடித்த பவுண்டரிகளும், ஹெலிகாப்டர் ஷாட் சிக்சர்களும் உடைத்தெறிந்தன.

சச்சின், டிராவிட் போன்ற ‘க்ளாஸ்’ பேட்மேன்களைப் பார்த்துப் பழகிய இந்திய ரசிகர்களுக்கு ‘மாஸ்’ பேட்ஸ்மேன் என்றால் யாரென சேவாக்கோடு சேர்ந்து அறிமுகமானவர் தோனி.

இந்திய கிரிக்கெட் அணியில் சச்சினின் சதங்கள், அனில் கும்ளே 10 விக்கெட்டுகளை வீழ்த்தியது ஆகிய தனி நபர் சாதனைகளைப் பார்த்து புல்லரித்துக் கொண்டிருந்த இந்திய ரசிகர்களுக்கு, டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராஃபி, உலகக் கோப்பை, சிபி சீரிஸ் என அணி வெற்றிகளைப் பட்டியலிட்டுக் காட்டியவர் தோனி.

மகேந்திர சிங் தோனி
படக்குறிப்பு,கேப்டன் கூல்.

இந்திய அணியில் உலகத் தரம் வாய்ந்த வீரர்கள் ஏராளமாக இருப்பினும் தோல்வி ஏன்? என தோனியின் விசாரணையில் இந்தியாவிடம் ஒரு நல்ல ஃபினிஷர் இல்லை என தெரிந்து கொண்டார்.

ஐசிசி ஒரு நாள் போட்டிகள் தர வரிசையில் 2008 – 2010 காலகட்டத்தில் பல மாதங்கள் தோனி நம்பர் 1 பேட்ஸ்மேனாக இருந்திருக்கிறார். தொடர்ந்து பல ஆண்டுகள் டாப் 10 பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருந்தார்.

தன் சொந்த சாதனைகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு ஆறாம் நிலை, ஏழாம் நிலையில் பிரஷர் நிறைந்த ஃபினிஷராக இந்தியாவுக்காக களமிறங்கினார் தோனி.

டி20 உலகக் கோப்பைக்கு ஆஸ்திரேலியாவிடம் ஒரு நல்ல அணி இருக்கிறது, இருப்பினும் தோனியை போல ஒரு நல்ல ஃபினிஷர் இல்லை என வெளிப்படையாக கடந்த மே 2021-ல் கூறியுள்ளார் ரிக்கி பான்டிங். அந்த அளவுக்கு ஃபினிஷர் வேலையை கச்சிதமாக செய்தவர் தோனி.

உலகிலேயே சர்வதேச டெஸ்ட் போட்டி (60), சர்வதேச ஒரு நாள் போட்டி (200), சர்வதேச டி20 (72) போட்டி என எல்லா ஆட்டங்களிலும் 60 போட்டிகளுக்கு மேல் தலைமை தாங்கிய ஒரே நபர் தோனி தான்.

ஒட்டுமொத்தமாக ஒரு அணியை 332 சர்வதேச போட்டிகளில் தலைமையேற்று வழிநடத்திய பெருமையும் தோனிக்கு மட்டுமே உண்டு. தான் ஆடிய கடைசி போட்டி வரை உலகின் சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவராகவே இருந்தார். உலகிலேயே அதிக ஸ்டம்பிங் செய்த விக்கெட் கீப்பர் தோனி தான்.

மகேந்திர சிங் தோனி
படக்குறிப்பு,இரும்புக் கோட்டையாக நின்று ஆட்டங்களை முடித்துக் கொடுத்த வீரர்.

“என் கிரிக்கெட் வாழ்கையில், நான் கண்ட சிறந்த கேப்டன் என்றால் அது தோனி தான்” என்றார் சச்சின் டெண்டுல்கர் .

“தோனியை வைத்துக் கொண்டு நான் போருக்கே செல்வேன்” முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்றுநர் கேரி க்ரிஸ்டன்.

“தோனி அன்றும், இன்றும், என்றும் என் மனதில் என் தலைவனாகத் தான் இருப்பார்” விராட் கோலி.

மகேந்திர சிங் தோனி
படக்குறிப்பு,வெற்றிக்குப் பாதை அமைத்த தோனியின் உள்ளுணர்வுகள்.

வரலாற்றில் எல்லா வெற்றிப் பயணங்களும் முடிவுக்கு வந்தே தீரவேண்டும். தோனி என்கிற பொன்னெழுத்துக்களால் வடிக்கப்பட்ட வாக்கியத்துக்கும் அப்படி ஒரு முற்றுப்புள்ளி வந்ததை ரசிகர்களால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை.

ஆம், 15 ஆகஸ்ட் 2020 அன்று வெறும் 17 சொற்களில் விடைபெற்றது தோனி என்ற வரலாறு.

பிரம்மாண்டமான இந்திய கிரிக்கெட் வானில், இனி வரும் தலைவர்களுக்கு ஒரு துருவநட்சத்திரமாய் மின்னிக் கொண்டிருப்பார் மகேந்திர சிங் தோனி.

Source BBC

Back to top button