புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவுகள் ஜனாதிபதியிடம் கையளிப்பு |
புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கும்போது கவனத்திற்கொள்ளவேண்டிய விடயங்களை உள்ளடக்கிய முன்மொழிவுகள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.
இன்று (13) பிற்பகல் கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற “பலமானதொரு அரசு – எமது அரசியலமைப்பொன்றுக்கான முன்மொழிவுகள்” என்ற கருப்பொருளின் கீழ் “யுத்துகம” அமைப்பு தயாரித்த முன்மொழிவுகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
எமக்கு உரிமையுள்ள பலமான அரசை மீண்டும் உருவாக்குதல், உண்மையான மக்கள் பிரதிநிதித்துவம் மற்றும் மக்கள் இறைமை, ஒற்றை ஆட்சியை நாட்டில் உறுதிப்படுத்தல், நிறைவேற்றுத்துறை, சட்டவாக்கத்துறை மற்றும் நீதித்துறைகளுக்கிடையில் அதிகார சமநிலை மற்றும் கடமையை முதன்மையாகக்கொண்ட சமூகம் என்ற ஐந்து இலக்குகளை கொண்டமைந்த முன்மொழிவுகள் தயாரிக்கப்பட்டுள்ளது.

“யுத்துகம” அமைப்பின் தலைவர் கெவிது குமாரதுங்க ஜனாதிபதியிடம் அம்முன்மொழிவுகளை கையளித்தார்.
கலாநிதி குணதாச அமரசேகர மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி மனோஹார த சில்வா ஆகியோருக்கு நாட்டுக்காக நிறைவேற்றிய சேவையை பாராட்டி ஜனாதிபதியினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
சியம்மகா நிக்காயவின் அஸ்கிரிய பீடத்தின் பதிவாளர் சங்கைக்குரிய மெதகம தம்மானந்த நாயக்க தேரரால் விசேட அனுசாசன உரை நிகழ்த்தப்பட்டது.

நாரஹேன்பிட்டி அபயராம விகாராதிபதி சங்கைக்குரிய முருத்தெட்டுவே ஆனந்த நாயக்க தேரர், சங்கைக்குரிய பெங்கமுவே நாலக்க தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர், அமைச்சர்களான பந்துல குணவர்தன, காமினி லொக்குகே, தயாசிறி ஜயசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் புத்திஜீவிகள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.