செய்திகள்

வானியல் அற்புதம்: சந்திரன், செவ்வாய், வெள்ளி நெருங்கும் காட்சியை பார்ப்பது எப்படி?

செவ்வாய், வெள்ளி ஆகிய கோள்களும் சந்திரனும் நெருக்கமாகத் தோன்றும் அரிதான நிகழ்வு நடக்கிறது. ஜூலை 12, 13 ஆகிய நாள்களில் இந்தக் காட்சியை வெறும் கண்களால் பார்க்க முடியும்.

உண்மையில் இந்த நிகழ்வின்போது கோள்கள் நெருங்கி வருவதில்லை. வெள்ளி, செவ்வாய் ஆகிய கோள்களுக்கு இடையேயான கோணம் வெறும் 0.5 டிகிரி மட்டுமே இருக்கும். அதனால் அவை ஒன்றிணைந்து இருப்பது போல காட்சியளிக்கும்.

அதே நேரத்தில் பிறைச் சந்திரனானது இவற்றுக்கு 4 டிகிரி கோணத்தில் இருக்கும். அதனால் இவை மூன்றும் இணைந்து ஒரே இடத்தில் இருப்பது போன்று நமக்குத் தோன்றும்.

இந்த நிகழ்வை ஜூலை 12, 13-ம் தேதிகளில் காணலாம். மேற்குத் திசை வானில் சூரியன் மறைந்த பிறகு சுமார் 45 நிமிடங்கள் கழித்து இந்த நிகழ்வைக் காண முடியும் என விஞ்ஞானிகள் கூறியிருக்கின்றனர்.

செவ்வாயும், வெள்ளியும் ஒன்றைவிட்டு ஒன்று விலகிச் செல்வது போன்ற தோற்றத்தை நாளை முதல் காணமுடியும்.

மேற்கு அடிவானத்தை மறைக்காதபடி ஒரு இடத்தில் நின்று கொண்டு பார்த்தால் இந்தக் காட்சிகளைத் தெளிவாகக் காணலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

JEFFREY L. HUNT

தொலைநோக்கி உள்ளிட்ட எந்தக் கருவியும் இதற்குத் தேவையில்லை. இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் இந்தக் காட்சியானது வெவ்வேறு வகையில் தென்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

2019-ஆம் ஆண்டில் இதுபோன்ற நிகழ்வு தென்பட்டது ஆயினும் அப்போது கோள்கள் சூரியனுக்கு மிக அருகில் இருந்ததால் தெளிவாகத் தெரியவில்லை.

அது சரி, இந்த வெள்ளிக்கோளின் மீது மனிதர்கள் ஏன் தனிப்பட்ட கவனம் செலுத்துகிறார்கள்?

வெள்ளியின் வளிமண்டலத்தில் பாஸ்பீன் வாயு

கோள்கள்

வெள்ளியின் வளி மண்டலத்தில் நுண்ணுயிர்கள் வாழ உதவும் வாயு ஒன்றை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கடந்த ஆண்டு கண்டுபிடித்தள்ளனர்.

பாஸ்பீன் எனப்படும் அந்த வாயுவின் மூலக்கூறு ஒரு பாஸ்பரஸ் மற்றும் மூன்று ஹைட்ரஜன் அணு ஆகியவற்றால் ஆனது.

பென்குயின் போன்ற உயிரினங்களின் குடல் நாளத்தில் வசிக்கும் நுண்ணுயிர்கள், ஆக்சிஜன் அளவு மிகவும் குறைவாக இருக்கும் உயிர்ச்சூழல் ஆகியவற்றில் வாழும் உயிரினங்கள் ஆகியவற்றால் இந்த பாஸ்பீன் வாயு உருவாக்கப்படும்.

இந்த வாயுவை செயற்கையாகவும் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்ய முடியும்.

ஆனால் வெள்ளி கோளில் பென்குயின்களும் இல்லை தொழிற்சாலைகளும் இல்லை.

இப்படிப்பட்ட சூழலில் வெள்ளியின் மேல் பரப்பில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் பாஸ்பீன் வாயு இருப்பதாக பிரிட்டனில் உள்ள கார்டிஃப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜேன் கிரீவ்ஸ் மற்றும் அவரது சக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

தங்கள் ஆய்வின் முடிவுகளை நேச்சர் அஸ்ட்ரானமி எனும் அறிவியல் சஞ்சிகையிலும் அவர்கள் பதிப்பித்துள்ளனர்.

வெள்ளி கோளின் மேற்பரப்பில் மிகவும் கணிசமான அளவில் பாஸ்பீன் வாயு கண்டறியப்பட்டுள்ளது.

உயிரினங்கள் அல்லாத ஒரு மூலத்திலிருந்து இந்த வாயு உருவாகி இருப்பதற்கு வாய்ப்பில்லை என்று அவர்கள் கருதுகிறார்கள்.

அப்படியானால் உயிருள்ள ஏதாவது ஓர் உயிரினத்தில் இருந்து அந்த வாயு உருவாகி இருப்பதற்கு வாய்ப்புள்ளது என்பது இதன் பொருள்.

“என் தொழில்முறை வாழ்க்கை முழுதும் இந்த பேரண்டத்தில் வேறெங்கும் உயிர்கள் உள்ளதா என்பதை அறியும் நோக்கிலேயே நான் ஆராய்ச்சி செய்து வருகிறேன். அதற்கு வாய்ப்புள்ளது என்பது மிகவும் பிரமிப்பூட்டும் வகையில் உள்ளது,” என்கிறார் பேராசிரியர் கிரீவ்ஸ்.

“ஒருவேளை நாங்கள் தவறான முடிவுக்கும் வந்து இருக்கலாம்; அப்படி இருந்தால் எங்கள் ஆய்வில் என்ன குறை உள்ளது என்பதை சுட்டி காட்டுவதை நாங்கள் ஊக்குவிக்கிறோம். எங்கள் ஆய்வு முடிவுகள் மற்றும் தரவுகள் ஆகியவற்றை அனைவரும் அணுக முடியும்; ஆய்வு முடிவுகளை கேள்விக்கு உட்படுத்த வேண்டும்; அறிவியல் அப்படித்தான் இயங்குகிறது,” என்கிறார் அவர்.

இந்தப் பேராசிரியர் மற்றும் அவரது குழுவினர் ஹவாயில் உள்ள ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல் தொலைநோக்கி மூலம் வெள்ளி கோளின் மேற்பரப்பில் பாஸ்பீன் இருப்பதை கண்டுபிடித்தனர்.

சிலியில் உள்ள அட்டகாமா பாலைவனத்தில் உள்ள தொலைநோக்கிகளை வைத்தும் இதை உறுதிப்படுத்திக் கொண்டனர்.

வெள்ளியில் வேற்று கிரக உயிர்கள் – ஆய்வு முடிவு மீது சந்தேகம்

வரைகலை: வெள்ளியில் இன்னும் எரிமலைகள் சீறிக்கொண்டிருக்கலாம்.
படக்குறிப்பு,வரைகலை: வெள்ளியில் இன்னும் எரிமலைகள் சீறிக்கொண்டிருக்கலாம்.

இந்த அனுமானத்தின் மீதான சந்தேகங்களும் எழாமலில்லை. அந்த ஆய்வுக் குழுவினர் தங்கள் ஆய்வுகள் குறித்து முடிவுகளை தெரிவிப்பதில் மிகவும் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்கின்றனர்.

வெள்ளியில் உயிரினங்கள் வாழ்வதாக தாங்கள் கண்டறிந்து விட்டோம் என்று அவர்கள் கூறவில்லை. வாய்ப்பு உள்ளது என்றே கூறுகின்றனர்.

வெள்ளியின் மேற்பரப்பிலுள்ள மேகங்கள் மிகவும் அடர்த்தியானவை. அந்த மேகங்களில் 75 சதவிகிதம் முதல் 95 சதவிகிதம் வரை சல்ஃபூரிக் அமிலம் உள்ளது. இந்த அமிலம் பூமியில் உயிர்கள் வாழ்வதற்கு ஏற்றதல்ல.

இந்த ஆராய்ச்சியில் பங்கேற்ற உயிரியலாளர் முனைவர் வில்லியம் பெய்ன்ஸ், அமெரிக்காவில் உள்ள மசாச்சூட்டஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் பணியாற்றுகிறார்.

எரிமலைகள், மின்னல், விண்கற்கள் ஆகியவை வெள்ளி கிரகத்தில் பாஸ்பீன் வாயு உருவாக காரணமாக இருந்திருக்கலாம் எனும் நோக்கில் இவர் ஆய்வுகளை மேற்கொண்டார்.

ஆனால் மேற்கண்ட வற்றின் மூலம் நிகழும் வேதியியல் மாற்றங்கள் வெள்ளியின் வளிமண்டலத்தில் உள்ள பாஸ்பீன் வாயுவை உருவாக்க 10,000 மடங்கு வலிமை குறைந்தவையாக இருக்கின்றன என்று அவர் கூறுகிறார்.

வெள்ளி கிரகத்தில் ஒருவேளை நுண்ணுயிர்கள் இருந்தால் அவை சல்ஃபூரிக் அமிலத்தின் பாதிப்பில் இருந்து தப்புவதற்காக மிகவும் மாறுபட்ட ஒரு உயிர்வேதியியல் கோட்பாட்டை பின்பற்றலாம் அல்லது அதில் இருந்து தப்புவதற்கான கவசம் எதையேனும் பரிமாணம் அடைந்திருக்கலாம் என்கிறார் பெய்ன்ஸ்.

Back to top button