செய்திகள்

பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

தற்போதைய சூழ்நிலை கருதி நாளை திங்கட்கிழமை 13 ஆம் திகதி முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்நிலையில் நாளை 13 ஆம் திகதி முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு மேலும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு தனியார், சர்வதேச பாடசாலைகள் மற்றும் மேலதிக வகுப்புக்கள் அனைத்திற்கும் இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தும் என்றும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

நாளை 13 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதிவரை நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகள் மற்றும் பிரிவேனாக்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான தீர்மானத்தை கல்வி அமைச்சு இன்று மாலை எடுத்ததாக கல்வி அமைச்சர்  டளஸ் அழகப் பெரும தெரிவித்தார்.

கல்வி அமைச்சின் இந்த தீர்மானத்தை அனைத்து தனியார் பாடசாலைகள்,  சர்வதேச பாடசாலைகள் மற்றும் மேலதிக வகுப்புக்களும்  பின்பற்றுவார்கள் என எதிர்ப்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் இன்று மாலை கல்வி அமைச்சின் ஊடகப் பேச்சாளரும் மேலதிக செயலாளருமான ரஞ்சித் சந்ரசேகர விஷேட அறிவிப்பினை வெளியிட்டதுடன் அதில் பின்வருமாறு சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

நாடளாவிய ரீதியில் தற்போதைய கொவிட் 19  தொற்று பரவல் நிலை தொடர்பில் கல்வி அமைச்சு  அதி தீவிர கவனத்தை செலுத்தியது.

தற்போதைய நிலையில், சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ள சில பொய்யான அடிப்படையற்ற செய்திகளால் பெற்றோர், மாணவர்கள் மற்றும் அதிபர் , ஆசிரியர்கள் அச்சத்துக்கும் சந்தேகத்துக்கு இடமான மன நிலையிலும் உள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் பாதுகாப்பை மையப்படுத்திய  பாடசாலைக் கல்வியைச் செயற்படுத்தும் போது,  சுதந்திர,  குழப்பமில்லாத மன நிலையுடன்  அனைவரும் செயற்பட வேண்டும் என்பதால், அவ்வாறான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது கல்வி அமைச்சின் கட்டாய கடமையாகும்.

அதனால்,  சுகாதார மற்றும்  பாதுகாப்புத் தரப்பினரின் ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்டு பாடசாலை மட்டத்தில்  ஏற்படவல்ல அனர்த்த நிலைமையை ஆராய்வதற்காக  ஒரு வாரம், அதாவது ஜூலை 13 ஆம் திகதி முதல்  17 ஆம் திகதி வெள்ளி வரை நாட்டில் அனைத்து பாடசாலைகளுக்கும், பிரிவெனாக்களுக்கும்  விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தை அனைத்து தனியார் பாடசாலைகள்,  சர்வதேச பாடசாலைகள் மற்றும் மேலதிக வகுப்புக்களும்  பின்பற்றுவார்கள் என கல்வி அமைச்சு எதிர்ப்பார்க்கின்றது.

எவ்வாறாயினும்  தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் பாடசாலைகள்,  குறித்த தினங்களில் திறக்கப்படுவதுடன், அந்த திகதிகளில் அப்பாடசாலைகளை திறந்து தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகளை  உரிய முறையில் முன்னெடுத்து செல்வது அனைத்து அதிபர்களினதும் பொறுப்பாகும் என கல்வி அமைச்சின் ஊடகப் பேச்சாளரும் மேலதிக செயலாளருமான ரஞ்சித் சந்ரசேகரவின் விஷேட அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Back to top button