செய்திகள்

மின்சார கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஆராயும் குழுவின் அறிக்கை அமைச்சரிடம் கையளிப்பு

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான மின்சாரக் கட்டண பற்றுசீட்டு தொடர்பில் பொது மக்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இன்று செவ்வாய்கிழமை மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க அமைச்சில் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.

ஊரங்கு பிறப்பிக்கப்பட்ட காலப் பகுதிக்கான மின்சாரக் கட்டணம் அதிகரித்துள்ளமை குறித்து ஆராய்வதற்கு கடந்த வாரம் ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டது.

மின்சார கட்டண நிவாரணம் தொடர்பான பல யோசனைகள் இந்த குழுவின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதில் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு மின்சாரக் கட்டணத்தை செலுத்துவதற்கு விகிதாசார அடிப்படையில் நிவாரணம் வழங்குவதற்கும் ஏனையோர் தொடர்பிலும் பல்வேறு பரிந்துரைகள் உள்ளடங்குகின்றன.

இவற்றை நாளை புதன்கிழமை இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் சமப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவை தொடர்பில் அமைச்சரவை எடுக்கும் தீர்மானங்களுக்கு அமைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

Back to top button