செய்திகள்

யாழில் ஒருவருக்கு கொரோனா தொற்று: தொடர்பிலிருந்த நால்வர் சுய தனிமைப்படுத்தலில்… – வைத்தியர் விளக்கம்

யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த 25ம் திகதி 2வது தடவையாகவும் அனுமதிக்கப்பட்டு 7ம் விடுதியில் தனிமைப்படுத்தல் அறையில் வைக்கப்பட்டிருந்தவருக்கு கொரோனா தொற்று இருக்கலாமென வைத்தியர் தெரிவித்துள்ளார்.

எனினும் அவருக்கு குறைந்தளவு தொற்றே ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் அவருடன் பழகிய வைத்தியசாலை ஊழியா்கள் 4 போ் அடையாளம் காணப்பட்டு அவா்களுடைய வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், எதிர்வரும் 31ம் திகதி பரிசோதனை நடத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.

குறித்த தகவலை யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளா் த.சத்தியமூா்த்தி கூறியுள்ளார். இது குறித்து இன்று மாலை யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பின்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா்.

இதன்போது மேலும் அவா் கூறுகையில், கடந்த 7ம் திகதி சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பிய  208 பேருடன் தங்கியிருந்தவா்,  22ம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்தாா்.

அன்றைய தினம் மாலையே 7ம் விடுதியில் உள்ள தனிமைப்படுத்தல் அறைக்கு மாற்றப்பட்டாா். அங்கு சிகிச்சை வழங்கப்பட்டு மீண்டும் விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பபட்டாா். மீண்டும் 25ம் திகதி சுகயீனம் காரணமாக  யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாா். இதற்கமைய நேற்று மாலை நடத்தப்பட்ட பீ.சி.ஆா் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

எனினும் அவருக்கு தொற்று குறைந்தளவிலேயே உள்ளது. இதற்கமைய யாழ்.போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணா்கள் குழு கூடி ஆழமாக இந்த விடயத்தை ஆராய்ந்துள்ளதுடன், குறித்த நபா் வைத்தியசாலையில் தங்கியிருந்த காலப்பகுதியில் வேறு யாருடனும் நேரடியாக தொடா்புகளை பேணினாரா? என்பதை ஆராய்ந்துள்ளோம். இதற்கமைய குறித்த நபா் தங்கியிருந்த விடுதியிலும், தனிமைப்படுத்தல் விடுதியிலும் பணியாற்றிய 4 உத்தியோகஸ்த்தா்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதற்கான குறைந்தளவு சந்தா்ப்பம் உள்ளதென்ற அடிப்படையில் அவா்கள் அவா்களுடைய வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். அவா்களுக்கான பரிசோதனைகள் எதிா்வரும் 31ம் திகதி நடைபெறவுள்ளது. மேலும் வைத்தியசாலையில் தனிமைப்படுத்தல் விடுதியில்

பாதுகாப்பு அங்கிகள், முக கவசங்கள் பயன்படுத்தப்பட்டே குறித்த நபா் பரிசோதிக்கப்பட்டுள்ளாா். இதேபோல் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து வந்தவா் என்ற அடிப்படையில் கையுறை, முக கவசம் அணிந்துள்ளதுடன்,  சமூக இடைவெளியினையும் பேணியிருக்கின்றனா். ஆகவே யாழ்.போதனா வைத்திசாலையில் உள்ள மற்றவா்களுக்கோ, ஊழியா்களுக்கோ தொற்று ஏற்பட வாய்ப்பு இல்லை. எனினும் இந்த நோய் பரவும் வேறும் தீவிரமானது என்பதால் நாம் மிக அவதானமாக உள்ளோம் என்றாா்.

 

Source : virakesari.lk

Back to top button