விளையாட்டு

சங்கக்கார இன்று வாக்குமூலம் வழங்கவுள்ளார்

2011 ஆம் ஆண்டு உலகக்கிண்ணக் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சாட்சியமளிப்பதற்காக, இலங்கை கிரிக்கெட் அணிக்கு அன்று தலைமைதாங்கிய குமார் சங்கக்கார, இன்று (2) வாக்குமூலம் வழங்க அழைக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டு குற்றச்சாட்டுகள் தொடர்பிலான பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினாலேயே அவர், இன்று காலை 9 மணிக்கு சாட்சியமளிக்க அழைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்டவீரர் உபுல் தரங்க, அந்தப் பிரிவில் 3 மணிநேரம், நேற்று (01) சாட்சியமளித்துள்ளார்.

இதேவேளை, அதற்கு முன்னர், இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் அரவிந்த டி சில்வா, மேற்படி குற்றச்சாட்டுகள் தொடர்பில், நேற்றுமுன்தினம் (30) சாட்சியமளித்துள்ளார்.

2011 உலகக்கிண்ண இறுதி கிரிக்கெட் போட்டியில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றுள்ளதென பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருந்த முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, அதுதொடர்பில் சாட்சியமளித்ததுடன், 24 ஆவணங்களையும் விசேட பொலிஸ் பிரிவிடம் கையளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே தொர் வாக்குமூலங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Back to top button