செய்திகள்

இலங்கை முல்லைத்தீவு: கட்டடம் கட்டத் தோண்டிய இடத்தில் மனித எலும்புக் கூடுகள்

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போர் முல்லைத்தீவு பகுதியிலேயே முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு மாங்குளம் மருத்துவமனை வளாகத்தில் மனித எச்சங்கள் (எலும்புகள்) சில இன்று, புதன்கிழமை, கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் நாளைய தினம் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர். அது நிறைவடைந்த பின்னரே அங்குள்ள மனித எச்சங்களின் முழுமையான எண்ணிக்கை தெரியவரும்.

மாங்குளம் மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டடமொன்று கட்டுவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையிலேயே இந்த மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ட்டடம் கட்டும் பணிகள் இடம்பெற்றுவரும் பகுதியில் கண்ணிவெடிகள் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளில் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் ஈடுபட்டிருந்த நிலையில் இந்த மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவில் கட்டடம் கட்டத் தோண்டிய இடத்தில் மனித எச்சங்கள்

இதையடுத்து, சம்பவம் தொடர்பில் மாங்குளம் போலீஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மாங்குளம் போலீஸார் தெரிவிக்கின்றனர்.

மனித எச்சங்கள் காணப்பட்ட பகுதிக்கு வருகை தந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எஸ்.லெனின்குமார், குறித்த பகுதியை பார்வையிட்டார்.

இப்பகுதியை மேலும் அகழ்ந்து, விடயங்களை ஆராயுமாறு அவர் போலீஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அத்துடன், குறித்த பகுதி தொடர்பிலான வரலாற்று ஆய்வுகளையும் மேற்கொள்ளுமாறு லெனின்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மனித எச்சங்கள் காணப்பட்ட பகுதியில் பெண்களின் ஆடைகள் சிலவும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு, விடயங்களை ஆராய்ந்ததன் பின்னரே மனித எச்சங்கள் எந்த காலப் பகுதிக்கு சொந்தமானவை என்பது தொடர்பில் தகவல்கள் கிடைக்கும் என போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இதற்கமைய, நாளைய தினம் முதல் குறித்த பகுதியில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

Sources :BBC

Tamil News

Back to top button